திருவாரூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் பருத்தி மகசூல் மும்முரம்

திருவாரூர், ஜுலை 18: திருவாரூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ள நிலையில் தற்போது பருத்தி பஞ்சினை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து நீரானது உரிய முறையில் கிடைத்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் விவசாயிகள் 3 போக நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர். அதன்பின்னர் மேட்டூர் அணையிலிருந்து உரிய நீர் கிடைக்காது மற்றும் பருவமழை பொய்த்துப் போவது போன்ற காரணங்களினால் 3 போகம் என்பது 2 போகமாக மாறி அதன் பின்னர் ஒருபோக சாகுபடியாக மாறியது.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ந் தேதி திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மேட்டூர் அணையானது ஆண்டுதோறும் ஜுன் 12ந் தேதி திறக்கப்பட்டு வருவதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலான அளவில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமான குறுவை சாகுபடி பரப்பான 97 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலாக 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்று வருகிறது. அதேபோல் சம்பா மற்றும் தாளடி சாகுபடியும் மாவட்டத்தில் 3 ஆண்டு காலமாக 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறியுள்ளனர்.

அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பருத்தி பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக கடந்த 3 ஆண்டு காலமாக 45 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ள நிலையில் 4வது ஆண்டாக நாடப்பாண்டிலும் இதேபோன்று 45 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டுள்ளதால் தற்போது இந்த பருத்தி பயிரானது அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் அதிலிருந்து பருத்தி பஞ்சினை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் பருத்தி மகசூல் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: