×

2 லட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி

கிருஷ்ணகிரி, ஜூலை 18: கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில், 2 லட்சம் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யும் பணியினை கலெக்டர் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, மீன்வளத்தினை அதிகரிக்கும் வகையில், முதற்கட்டமாக 2 லட்சம் நன்கு வளர்ந்த பெரு ரக நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யும் பணியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் கிருஷ்ணகிரி, பாரூர், பாம்பாறு, ஓசூர் மற்றும் சூளகிரி அணைகளில் மீன்வளர்ப்பு பணிகளும், கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணை, பாம்பாறு அரசு மீன் பண்ணை மற்றும் ஓசூர் அரசு மீன் பண்ணைகளில் மட்டும் மீன்குஞ்சு வளர்த்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகள், தென்பெண்ணையாறு மற்றும் காவிரி ஆற்றில் விடப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு, 3 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்தெடுத்து தென்பெண்ணையாறு மற்றும் காவிரி ஆற்றில் விடப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே மீன் நுகர்வு அதிகரித்ததால், கூடுதலாக மீன் குஞ்சுகள் வளர்த்து ஆற்றில் விட மீனவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 2024ம் ஆண்டு 4 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

நடப்பாண்டும் ரூ.12 லட்சம் மதிப்பில் 4 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக 2 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யும் பணி துவங்கியுள்ளது. மாவட்டத்தில் நீர்த்தேக்கம் மற்றும் ஏரிகளில் மீன்வளர்ப்பு நடவடிக்கை மேற்கொள்வது, விரிவாக்க பணிகள் மேற்கொள்வது கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் நோக்கமாகும். தமிழ்நாட்டின் பெரும்பாலான ஆறுகளில், பல்வேறு காரணங்களால் நாட்டின மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்வதன் மூலம், உயிரினங்களின் உயிர்ச் சமநிலையை பாதுகாக்க முடியும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர். ஆண்டிற்கு 23 ஆயிரம் டன் அளவிற்கு மீன் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆறுகளில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம், நிலையான மீன் உற்பத்தி மற்றும் பல்லுயிர் உற்பத்தியை பாதுகாக்க முடியும். மீனவர்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை பேணிக்காக்க முடியும். மீனவர்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் மீன் பிடிக்கும் போது, கொசு வலைகளை பயன்படுத்தக் கூடாது. மீனவர்கள் சிறிய ரக மீன் குஞ்சுகள், சினை மீன்கள் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இது வளம் குன்றா மீன் உற்பத்தியை அதிகரிக்கும். ஆறுகளில் வெடி வைத்து மீன் பிடித்தல், மீன்களின் வாழ்விடத்தை சிதைப்பது மட்டுமல்லாது, மீன் உற்பத்தியை கணிசமாக குறைத்துவிடும். மீனவர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ரத்தினம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர்கள் கதிர்வேல், கோகிலாமணி, தாசில்தார் சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாப்பி பிரான்சினா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post 2 லட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Penneswaramada, Thenpennai, Krishnagiri district ,Penneswaramada ,Thenpennai, Krishnagiri district ,Dinakaran ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்