அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவம் நிறைவு; ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை

திருவண்ணாமலை, ஜூலை 17: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. அதையொட்டி, ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், ஆனி பிரமோற்சவ விழா மிகவும் சிறப்புக்குரியது. அதன்படி, தட்சணாயண புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அப்போது, திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் பவனி வந்து காட்சியளித்தனர். ஆனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, கடந்த 10 நாட்களாக அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகளும், மாடவீதியில் சுவாமி திருவீதி உலாவும் நடந்து வந்தது. மேலும், கடந்த 12ம் தேதி ஆனி திருமஞ்சனம் விமரிசையாக நடந்தது.

இந்நிலையில், ஆனி பிரமோற்சவ விழாவின் நிறைவாக நேற்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பகல் 12 மணியளவில் ஐயங்குள வீதியில் உள்ள ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது. அப்போது, ஐயங்குளம் அருகே அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவம் நிறைவு; ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை appeared first on Dinakaran.

Related Stories: