கொரடாச்சேரி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

நீடாமங்கலம், ஜூலை 17: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொது மக்களின் குறைகளை அவரவர் இருப்பிடத்திற்கு சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் நகரப் பகுதி ,பேரூர் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளும், அதேபோல் கிராமப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 வகையான சேவைகளும் பெற முடியும். முக்கியமாக இம்முகாம்களில் மகளிர் உரிமைத் தொகையை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் உரிய தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவு விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிதம்பரத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நீடாமங்கலம் அருகே உள்ள கொரடாச்சேரி பேரூராட்சியில் நடந்த முகாமில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து மனுக்களை பெற்றனர். முகாமில் ஒன்று முதல் 8 வார்டுகளைச் சேர்ந்த 235 மனுக்கள் பெறப்பட்டது. கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 162 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, துணைத்தலைவர் தளபதி, செயல் அலுவலர் கலியபெருமாள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கொரடாச்சேரி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: