சென்னை, ஜூலை 17: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.50 மணிக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், காலை 7.40 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் 1.35 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், மும்பையில் இருந்து காலை 7 மணிக்கு சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.30 மணிக்கு அந்தமானில் இருந்து சென்னை வர வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் 2.50 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 3 வருகை விமானங்கள், 3 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த விமானங்களில் பயணம் செய்ய போதிய பயணிகள் இல்லாததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆனாலும் இந்த விமானங்களில் பயணிக்க ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு வேறு விமானங்களில் பயணிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், சில பயணிகளுக்கு வேறு மாற்று தேதிகளில் பயணிப்பதற்கு வசதியாக டிக்கெட்கள் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
The post பயணிகள் தவிப்பு சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் திடீர் ரத்து appeared first on Dinakaran.
