4 கட்டங்களாக 353 முகாம்கள் தஞ்சையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்்கியது

தஞ்சாவூர், ஜூலை 16: தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மானம்பாடி ஊராட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மக்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டதோடு, விவரங்களை கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.

இம்முகாமில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், துணை மேயர் தமிழழகன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சார் ஆட்சியர் த.ஹிருத்யா, எஸ்.விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இம்முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; முதலமைச்சர் மக்களின் குறைகளை வீட்டிற்கே சென்று கேட்டறிந்து தீர்வு காணும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நேற்று முதல் நவம்பர் 2025 வரை மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக, நேற்று முதல் 3,563 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில் 1,428 முகாம்கள் நகர்ப்புறங்களிலும், 2,135 முகாம்கள் ஊரகப் பகுதியிலும் நடைபெறும்.

இந்த முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள், விண்ணப்பம் மற்றும் அரசு வழங்கும் சேவைகளைப் பெறத் தேவையான தகுதிகள், ஆவணங்கள், ஆகிய விவரங்கள் அடங்கிய தகவல் கையேட்டினை வழங்கும் பணியினை தன்னார்வலர்கள், அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்களுடன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்ற விவரமும் தன்னார்வலர்களால் தெரிவிக்கப்படுகிறது. முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

‘‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

உங்களுடன் ஸ்டாலின்\” திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் நவம்பர் 15 வரை 4 கட்டங்களாக 353 முகாம்கள் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 120 முகாம்கள் அதாவது நகர்பகுதியில் 45 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 75 முகாம்களும் நடைபெற உள்ளன. 3,13,646 வீடுகளுக்கு 802 தன்னார்வலர்களால் 15.07.2025 முதல் 14.08.2025 வரை நடைபெறும்.

இதில், பொதுமக்களின் மனுக்கள் பெற்ப்பட்டு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் மணிமாறன், திருவிடைமருதூர் வட்டாட்சியர் சாந்தமீனா, கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராசன், சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post 4 கட்டங்களாக 353 முகாம்கள் தஞ்சையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்்கியது appeared first on Dinakaran.

Related Stories: