ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ரூ.17.65 கோடியில் 198 வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.17.65 கோடியில் 198 வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும், உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ளவும் பணிகளை திறம்பட கண்காணிக்க ஏதுவாகவும், துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2025-26ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.17 கோடியே 65 லட்சம் மதிப்பிலான 198 வாகனங்களை கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில், அந்த வாகனங்களுக்கான சேவையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து, அலுவலர்களுக்கு சாவிகளை வழங்கினார்.

திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் ரூ.109 கோடியே 91 லட்சம் மதிப்பிலான 1018 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஆணையர் பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ரூ.17.65 கோடியில் 198 வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: