தஞ்சாவூர், ஜூலை 11: தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோயில் அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் உள்ள 88 கோயில்களுள் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இருந்தாலும் வாகனம் நிறுத்துமிடம் இல்லாததால் பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் வடபத்திரகாளியம்மன் கோயிலில் வாகனம் நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோயிலுக்கு அருகே கோயிலுக்கு சொந்தமான 1¼ ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடம் புதர் மண்டி, சீமைக்கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அந்த இடத்தில் மாநகராட்சி மூலம் சுற்றுச்சுவர் அமைத்து வாகன நிறுத் துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆய்வின் போது அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post வடபத்திரகாளியம்மன் கோயிலில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க மேயர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.
