அப்போலோ புரோட்டான் மருத்துவமனையில் கல்லீரல் புற்றுநோய்க்கு பிரத்யேக மையம்: முன்னாள் ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

சென்னை: கல்லீரல் புற்றுநோய்க்கு ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்க அப்போலோ புரோட்டான் மருத்துவமனை பிரத்யேக மையத்தை தொடங்கி உள்ளது. இந்தியாவில் கல்லீரல் புற்றுநோயின் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. ஹெபடைடிஸ் தொற்றுகள், மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோய், உடல் பருமன் மற்றும் தாமதமாக நோயைக் கண்டறிதல் ஆகியவற்றின் தொடர்ச்சியான அதிகரிப்பே இதற்கு காரணமாகும். தமிழ்நாட்டில், குறிப்பாக கல்லீரல் உயிரணு புற்றுநோய் மற்றும் பிற உறுப்புகளிலிருந்து கல்லீரலுக்கு பரவியிருக்கும் புற்றுநோய் ஆகியவை அதிகரித்து காணப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கல்லீரல் புற்றுநோய்க்கு ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்க அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனை பிரத்யேக மையத்தை தொடங்கி உள்ளது.

இந்த புதிய மையத்தை அப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி கரண் பூரி மற்றும் புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் சுஜித் குமார் முல்லப்பள்ளி ஆகியோர் முன்னிலையில் ஓய்வுபெற்ற ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தில் மருத்துவ புற்றுநோயியல், இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை, கல்லீரல்-பித்தப்பை அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு புற்றுநோயியல், இடையீடு சார்ந்த கதிரியக்கவியல், மருத்துவ மரபியல், நோயியல், மயக்கவியல், வலித்தணிப்பு மற்றும் ஆதரவு சிகிச்சை ஆகிய துறைகளின் நிபுணர்களை ஒன்றிணைக்கிறது.

இது தொடர்பாக கரண் பூரி கூறியதாவது: அப்போலோவின் மேம்பட்ட கல்லீரல் புற்றுநோய் மையம் தொடங்குவதன் மூலம், இந்தியாவில் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையை மறுவரையறை செய்வதற்கான ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை நாங்கள் எடுத்துள்ளோம். இந்த கிளினிக், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் குறிப்பிட்ட நோய்களுக்கான சிறப்பு மையமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அப்போலோ புரோட்டான் மருத்துவமனையில் கல்லீரல் புற்றுநோய்க்கு பிரத்யேக மையம்: முன்னாள் ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: