சேவலை விழுங்கிய மலைப்பாம்பு குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஜூலை 6: குடியாத்தம் அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஆம்பூராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன், விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென கோழிகள் அதிக நேரம் அலறல் சத்தம் கேட்டது. மேலும் நாய்களும் குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மேகநாதன் வீட்டிற்குள்ளே இருந்து வெளியே வந்தார். அப்போது 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சேவலை விழுங்கி விட்டு மற்றொரு சேவலை விழுங்க முயற்சி செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், குடியாத்தம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பாதுகாப்பாக சைனகுண்டா காப்புக்காட்டில் வனத்துறையினர் விட்டனர்.

The post சேவலை விழுங்கிய மலைப்பாம்பு குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: