கிருஷ்ணகிரி, ஜூன் 16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,422 விவசாயிகளிடம் இருந்து இதுவரை 2548 மெட்ரிக் டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களது வங்கி கணக்கில் ரூ.10.45 கோடி செலுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம் அஞ்செட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராகி கொள்முதல் நிலையம் மூலம் பயனடைந்து வரும் ராகி விவசாயிகளிடம், நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் மூலம், கலெக்டர் தினேஷ்குமார் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 ஒன்றியங்களில் விவசாயிகள் அதிகளவில் ராகி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ராகி பயிரிடப்பட்டது. இவ்வாண்டு, 42 ஆயிரத்து 700 ஹெக்டேர் பரப்பளவில் ராகி பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி, வேப்பனஹள்ளி ஆகிய ஒன்றியங்களில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரியாக ராகி பயிரிடப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதிகளில் நீர்ப்பாசன முறையில் ராகி பயிரிடப்படுகிறது. மேலும், ராகி அதிகமாக சாகுபடி செய்யும் மதகொண்டப்பள்ளி, போடிச்சிப்பள்ளி, பாகலூர், பேரிகை, அஞ்செட்டி மற்றும் குப்பச்சிப்பாறை ஆகிய இடங்களில் இடைத்தரகர்களின்றி விவசாயிகள் விளைவிக்கும் ராகியினை நேரடியாக விற்பனை செய்ய, நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இக்கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 வரையிலும், மாலை 2.30 மணி முதல் 6.30 மணி வரை செயல்படுகிறது. விவசாயிகள் தங்கள் செல்போன் எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகிய நகல்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய பட்டா, சிட்டா அடங்கல் விவரங்களை நேரடி ராகி கொள்முதல் நிலையத்தில் அளித்து முன்பதிவு செய்துகொள்ளலாம். விவசாயிகள் விற்பனை செய்யும் ராகிக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த கரீப் பருவம் 2023&-24-ல் கிலோ ஒன்றுக்கு ரூ.38.46 என்கிற விலையில் 944.600 மெ.டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டு, 573 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.3 கோடியே 63 லட்சத்து 29 ஆயிரத்து 316 நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
இதே போல், காரீப் பருவம் 2024-25-ல் 9 ஆயிரம் மெ.டன் ராகி கொள்முதல் செய்ய தமிழக அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை, விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ராகி ரூ.42.90 என்ற விலையில் 1,604 மெட்ரிக் டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டு, 849 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6 கோடியே 82 லட்சத்து 17 ஆயிரத்து 435 நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை மொத்தம் 2548 மெட்ரிக் டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டு, 1,422 விவசாயிகளுக்கு ரூ.10 கோடியே 45 லட்சத்து 46 ஆயிரத்து 751ஐ, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
ராகி கொள்முதல் நிலையங்களில், 1 கிலோவிற்கு ரூ.42.90 பைசா விவசாயிகளுக்கு கிடைப்பதால், சந்தையில் கிடைக்கும் விலையை விட ரூ.5 முதல் ரூ.8 வரை அதிகமாக கிடைக்கிறது. மேலும், ராகி கொள்முதல் நிலையம் தங்கள் பகுதிகளிலேயே இருப்பதால் போக்குவரத்து செலவு மற்றும் நேரம் மீதமாகிறது. எனவே, விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்த ராகியினை வியாபாரிகளிடம் விற்பனை செய்வதை தவிர்த்து, ராகி கொள்முதல் நிலையத்தில் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post விவசாயிகளிடம் 2548 மெட்ரிக் டன் ராகி கொள்முதல் appeared first on Dinakaran.