அரியலூர், ஜூன் 14: அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர், மாதாந்திர உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வேண்டி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 67 மனுக்கள் பெறப்பட்டு இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆக்ஸிலரி ஊன்று கோல், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு எல்போ ஊன்றுகோல், 7 பார்வையற்றோருக்கான ஊன்றுகோல்கள் என மொத்தம் 22 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.93,132 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரத்தினசாமி வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுலவர் மஞ்சுளா, இதர அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 67 மனுக்கள் பெறப்பட்டு இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
The post அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம்: 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.