ரெட்டிச்சாவடி அருகே ஆற்றில் பிணமாக கிடந்த பேக்கரி ஊழியர்

ரெட்டிச்சாவடி, ஜூன் 14: ரெட்டிச்சாவடி அருகே பெரியகங்கணாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் பேக்கரி ஊழியர் பிணமாக மிதந்து கிடந்தார். இவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவையை அடுத்த தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே பெரியகங்கணாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் நேற்று காலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்து கிடந்தார். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் ஆற்றில் மிதந்த வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுந்தர மூர்த்தி மகன் சாம்வேல் (19) என தெரியவந்தது. இவர் சென்னையில் உள்ள தனியார் பேக்கரியில் வேலை செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் உறவினரை பார்க்க வந்தவர் நேற்று காலை பெரியகங்கணாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் பிணமாக மிதந்தார். அவர் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இறந்த சாம்வேல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், கடந்த 11ம் தேதி தனது நண்பர் யோகேஸ்வரனை பார்க்க கடலூர் வந்ததும், பின்னர் நண்பருடன் சேர்ந்து புதுச்சேரி கன்னியகோயில் பகுதியில் உள்ள பாரில் மது அருந்தியதும் தெரிந்தது. தொடர்ந்து மது போதையில் இருவரும் கடலூர் ஆல்பேட்டை பகுதியில் உள்ள சாம்வேல் காதலி வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். காதலியின் பெற்றோர் வெளியே வந்ததும் சாம்வேல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து தனியாக இருந்த யோகேஸ்வரனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்ததும், தப்பி ஓடிய சாம்வேல் ஆற்றில் இறந்து கிடந்ததும் தெரிந்தது.

The post ரெட்டிச்சாவடி அருகே ஆற்றில் பிணமாக கிடந்த பேக்கரி ஊழியர் appeared first on Dinakaran.

Related Stories: