தேனி, ஜூன் 13: குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் ஜூன் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. இதில் தேனி மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம்.ஜெ.நடராஜன் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். பின்னர், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியினை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்வில் அமர்வு நீதிபதிகள் அனுராதா, கணேசன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணக்குமார், சார்பு நீதிபதிகள் பரமேஸ்வரி, கீதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி அலெக்ஸ்ராஜ், நீதித்துறை நடுவர்கள் ஜெயமணி, ஆசைமருது, ஜெயபாரதி, தொழிலாளர் நல உதவி ஆணையர் மனுஜ்சியாம்சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மாவட்ட நீதிபதி, கலெக்டர் துவக்கி வைத்தனர் appeared first on Dinakaran.