தென்காசி அருகே பரிதாபம் முதியோர் இல்லத்தில் உணவருந்திய 3 பேர் பலி: மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை

சுரண்டை: தனியார் முதியோர் இல்லத்தில் உணவருந்திய மூன்று பேர் உயிரிழந்தனர். 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் நடத்தும் அன்னை நல்வாழ்வு முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என 59 பேர் வசித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட பிறகு செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர்கணேஷ் (42), அம்பிகா (40), சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகம்மாள் (60) ஆகிய 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று காலை மேலும் 8 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சங்கர்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தனர்.

தகவலறிந்த தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த் அரசு அதிகாரிகள் முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவு, குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்து மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர். மேலும் அங்கிருந்த 48 பேர் அருகில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை கலெக்டர் கமல்கிஷோர், பழனிநாடார் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

The post தென்காசி அருகே பரிதாபம் முதியோர் இல்லத்தில் உணவருந்திய 3 பேர் பலி: மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: