இந்தியா, பாகிஸ்தான் போர் டிரம்ப் அழைத்தார் மோடி சரணடைந்தார்: ராகுல்காந்தி கடும் விளாசல்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில்,’ இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின் போது அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சரணடைந்து விட்டார். ஆனால் 1971ஆம் ஆண்டில் அமெரிக்கா தனது ஏழாவது கடற்படையை அனுப்பிய போதிலும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போரில் அசைந்து கொடுக்கவில்லை. டிரம்ப்பிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. மோடி உடனடியாக சரணடைந்தார். வரலாறு இதற்கு சாட்சி, இது பாஜ-ஆர்எஸ்எஸ்ஸின் குணாதிசயம். அவர்கள் எப்போதும் தலைவணங்குகிறார்கள்.

எனக்கு பாஜ-ஆர்எஸ்எஸ்காரர்களை தெரியும்; நீங்கள் கொஞ்சம் அதிகமாக அவர்களுக்கு ஒரு சிறிய அழுத்தம் கொடுத்தால் கூட, அவர்கள் பயந்து ஓடிவிடுவார்கள். ஆனால் காங்கிரஸ் சிங்கங்கள் வல்லரசுகளுடன் சண்டையிடுகின்றன, அவர்கள் ஒருபோதும் தலைவணங்கவில்லை. 1971 போரின் போது இந்திரா காந்தி சரணடையவில்லை, மேலும் அவர் என்ன செய்ய நினைத்தாரோ அதைச்செய்தார். அமெரிக்காவின் அச்சுறுத்தலை மீறி பாகிஸ்தானை அவர் இரண்டாக உடைத்தார். மகாத்மா காந்தி, நேரு, வல்லப் பாய் படேல் ஒருபோதும் சரணடையவில்லை, அவர்கள் வல்லரசுகளுடன் போராடினர். ஆனால் டிரம்ப் போன் செய்து, ‘நரேந்திரா, சரணடை’ என்று சொன்னபோது அப்படியே அவர் செய்து விட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* சீனப்பொருட்களை அதானியும், அம்பானியும் இந்தியாவில் விற்கிறார்கள்
ராகுல்காந்தி கூறும்போது,’அனைத்து சீனப் பொருட்களையும் அதானி இந்தியாவில் விற்கிறார். சீனப் பொருட்கள் மூலம் அதானியும், அம்பானியும் பணம் சம்பாதிக்கிறார்கள். சீனா தனது அனைத்து பொருட்களையும் இந்தியாவில் விற்கிறது. அதானி மற்றும் அம்பானி போன்றவர்களால் இந்தியாவில் ஒரு செல்போன் விற்கப்படும்போது, ஆதனால் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் சீன இளைஞர்களே, இந்திய இளைஞர்கள் அல்ல’ என்று தெரிவித்தார்.

The post இந்தியா, பாகிஸ்தான் போர் டிரம்ப் அழைத்தார் மோடி சரணடைந்தார்: ராகுல்காந்தி கடும் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: