சென்னை தீவுத்திடலில் வரும் 1ம் தேதி வரை மீன் உணவு திருவிழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை, தீவுத்திடலில் நேற்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் நேற்று முதல் வரும் 1ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு மீன் உணவு திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருவெற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் மீன் அங்காடி, சிந்தாதிரிப்பேட்டை புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடி உள்பட பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீன் அங்காடிகள் அமைத்தல், மீன் இறங்கு தளங்கள், கூடுதல் படகு அணையும் தளம், என ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு மீன் உணவு திருவிழா – 2025 நடத்த உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மீன் உணவு திருவிழாவையொட்டி சென்னை தீவுத்திடலில் 1,00,000 சதுர அடி பரப்பளவுள்ள குளிரூட்டப்பட்ட அரங்கம் அமைக்கப்பட்டு 50 அரங்கங்கள் கொண்ட சென்னை கடல்மீன் உணவு காட்சி கூடாரம், 15 அரங்கங்களுடனான மீன்வளம் மற்றும் வண்ணமீன்கள் காட்சிக்கூடாரம், 20 அரங்கங்களுடனான மீன் உணவு கூடங்கள், செயல்விளக்க கூட்ட அரங்கு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உணவுத் திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், சமயற்கலை மாணவர்கள் மற்றும் மீனவ மகளிருக்கு சமையல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. கடல் மீன்கள், குறிப்பாக இறால் மீன்கள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற புரதம் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆரோக்கியமான உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.

கடல்மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஐயோடின், தாதுக்கள், விட்டமின்கள் ஏ, டி, கே உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை தீவுத்திடலில் வரும் 1ம் தேதி வரை மீன் உணவு திருவிழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: