மேற்குவங்கத்தில் 5 விதமான நெருக்கடிகள் மம்தா அரசு கொடூரமான அரசு: பிரதமர் மோடி தாக்கு

அலிப்பூர்துவார்: மேற்குவங்க மாநிலத்தில் மிகவும் கொடூரமான அரசு உள்ளதாக பிரதமர் மோடி தாக்கி பேசினார். மேற்குவங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசையும், முதல்வர் மம்தாவையும் கடுமையாக தாக்கிப்பேசினார்.

அவர் கூறும்போது,
மேற்குவங்க மாநிலம் வன்முறை, ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இப்போது கொடூரமான அரசிலிருந்து மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மக்கள் கொடூரமான அரசை விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு மேற்குவங்கமும் இனி கொடுமையையும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது. முதலாவதாக, சமூகத்தின் கட்டமைப்பையே கிழித்து எறியும் பரவலான வன்முறை மற்றும் சட்டமின்மை.

இரண்டாவது, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடையே வளர்ந்து வரும் பாதுகாப்பின்மை உணர்வு, அவர்களுக்கு எதிராக செய்யப்படும் கொடூரமான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மூன்றாவது நெருக்கடி, அதிகரித்து வரும் வேலையின்மை. வாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்களிடையே ஆழ்ந்த விரக்தி ஏற்பட்டுள்ளது. நான்காவது பரவலான ஊழல். இது அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அரித்து வருகிறது. ஐந்தாவது நெருக்கடி ஆளும் கட்சியின் சுயநல அரசியலில் இருந்து உருவாகிறது. இது ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கிறது. முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் நடந்த வன்முறைகள் திரிணாமுல் அரசாங்கத்தின் கொடூரத்திற்கும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறியதற்கும் தெளிவான எடுத்துக்காட்டுகள்.

ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தை மேற்குவங்க அரசு நாசமாக்கியுள்ளது. இது சில ஆயிரம் ஆசிரியர்களின் அழிவு மட்டுமல்ல, முழு கல்வி முறையும் சீரழிந்து வருகிறது. இப்போது கூட திரிணாமுல் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மாறாக, அவர்கள் நீதிமன்றங்களையும் நீதித்துறை அமைப்பையும் குறை கூறுகிறார்கள். சமீபத்திய நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தா கலந்து கொள்ளவில்லை. மேற்குவங்கத்தின் வளர்ச்சியை விட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியில் முதல்வர் மம்தா அதிக ஆர்வம் காட்டுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

மோடிக்கு திரிணாமுல் 5 கேள்விகள்
மேற்குவங்க மாநிலத்தில் 5 விதமான நெருக்கடிகள் உள்ளதாக பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து, அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் 5 எதிர்கேள்விகளை எழுப்பி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
மோடி 5 நெருக்கடிகளை பட்டியலிட்டார்.

இப்போது உண்மையை பேசலாம்.

  1. மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கண்ட மணிப்பூரில் நிலவும் குழப்பத்தை பிரதமர் மோடி முதலில் சரி செய்ய வேண்டும்.
  2. பெண்கள் பாதுகாப்பு: உன்னாவ் முதல் ஹாத்ராஸ் வரை, பா.ஜவின் சாதனைப் பதிவு மவுனத்திலும் அவமானத்திலும் மூழ்கியுள்ளது.
  3. வேலைவாய்ப்பு: இளைஞர்களின் நம்பிக்கையின்மையா? வினாத்தாள் கசிவு, நீட் ஊழல், 45 சதவீத வேலையின்மை. இதுதான் மாணவர்களுக்கு பாஜவின் தேசிய பரிசு.
  4. ஊழலா?: உங்கள் அமைச்சரவையில் பாதி பேர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
  5. நிதி மறுப்பு: உங்கள் (மோடி) அரசாங்கத்தின் பழிவாங்கும் அரசியலால் மேற்குவங்க மாநிலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு நிதி மறுக்கப்பட்டது.
    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா?
பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா சவால் விடுத்துள்ளார். அதன் விவரம்: பிரதமர் மோடியின் கருத்துக்கள் அதிர்ச்சியளிக்கிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு சகிப்புத்தன்மை இல்லாத இந்தியாவின் செய்தியை வெளிப்படுத்தவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்குச் செல்லும்போது, ​​அவர் இப்படிப் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை . நான் அவருக்கு சவால் விடுகிறேன். அவருக்கு தைரியம் இருந்தால், நாளையே தேர்தல் நடத்துங்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம், மேற்குவங்கமும் தயாராக உள்ளது. மேற்குவங்க மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், நேரம் ஒரு காரணியாகும்’என்று அவர் கூறினார்.

The post மேற்குவங்கத்தில் 5 விதமான நெருக்கடிகள் மம்தா அரசு கொடூரமான அரசு: பிரதமர் மோடி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: