* தலைமை பண்பு இல்லாதவர், பாஜ கூட்டணிக்காக மனைவியுடன் என் காலில் விழுந்தார், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பாமகவில் சலசலப்பு
திண்டிவனம்: ‘‘வளர்த்த கிடா மார்பில் பாய்ந்து விட்டது, பெற்றதாய் என்றும் பாராமல் பாட்டிலால் தாக்கினார், மூச்சு விடாமல் பொய் பேசுபவர், தலைமை பண்பு இல்லாதவர், பாஜ கூட்டணிக்காக மனைவியுடன் என் காலில் விழுந்தார்’’ என்று அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி கதறி அழுதார். தந்தை, மகன் மோதலின் உச்சகட்டத்தால் பாமகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மகள் வழி பேரன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் அறிவிக்க, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி குரல் கொடுத்ததோடு தன்னை பனையூரில் வந்து நிர்வாகிகள் சந்திக்கலாம் என கூறி மைக்கை தூக்கி டேபிளில் வீசினார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், இது நான் தொடங்கிய கட்சி, நான் சொல்வதை கேட்பவர்கள் இருக்கலாம், இல்லாவிட்டால் போகலாம் என்று அன்புமணியை எச்சரித்தார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாசுக்கும், தலைவரான அன்புமணிக்கும் வெடித்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் மாமல்லபுரம் வன்னிய இளைஞர் மாநாடு முடிந்தவுடன் தனது பலத்தை கட்சியினருக்கு நிரூபிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வந்தார். மாவட்ட செயலாளர், மகளிர், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் பிசுபிசுத்த நிலையில் வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் ராமதாசுக்கு கைகொடுத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற சமூக நீதிப் பேரவை, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதரவும் அதிகளவில் கிடைத்ததால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார்.
ராமதாஸ் நடத்திய எந்த கூட்டத்திலும் செயல் தலைவர் அன்புமணி கலந்துகொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி இருவரையும் சமாதானப்படுத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில், தர்மபுரியில் பேசிய அன்புமணி, ‘நான் என்ன தவறு செய்தேன். என்னை ஏன் தலைவர் பதவியில் இருந்து நீக்கினீர்கள்’ என வேதனையுடன் கட்சிக்காரர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டு பேசினார். இதுகுறித்து செய்தியாளர்கள் ராமதாசிடம் கேட்டபோது, வியாழக்கிழமை (நேற்று) உங்களுக்கு பதில் கூறுகிறேன் என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் ஆதாயம் தேட முயற்சி எடுத்து இருக்கிறார். இருப்பினும் அதற்குண்டான விளக்கத்தையும், பதிலையும் அளிப்பது எனது கடமையாகும். இனிப்பை (சுவீட்ஸ்) தவிர்த்து கசப்பான வார்த்தைகளை கொண்ட மருந்தைதான் பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சொல்லப் போனால் தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியை 35 வயதில் என்னுடைய சத்தியத்தையும் மீறி மத்திய கேபினட் அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன்.
என்ன தவறு செய்தேன் என கேள்வி கேட்டு, என்னை குற்றவாளியாக மக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்களிடமும் அடையாளம் காட்டி அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார். மூச்சுவிடாமல் பொய் பேசுவார். நான் அதற்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை துவக்கி முதலில் அடித்துஆட ஆரம்பித்தது அவர் தான். ஏதோ நான் போகிற போக்கில் சும்மா சொல்லிவிட்டு போகவில்லை. ஆதாரத்தோடு இன்று ஒளிவுமறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்துகிறேன்.
பாண்டி பொதுக்குழுவில் என்ன நடந்தது? நீங்களும் வந்திருந்தீர்கள், உலகமே பார்த்து அதிர்ந்தது. ஒட்டுமொத்த பொதுக்குழு கூட்டமும் ஊடகமான நீங்களும் சேர்ந்தே அதிர்ச்சிக்கு உள்ளானீர்கள். மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் எதையும் கடைபிடிக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார்? நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன், முகுந்தனை இளைஞரணி தலைவர் என்று.
வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்க முகுந்தனை நியமனம் செய்தேன். சுவற்றில் வீசிய பந்து திரும்புவதுபோல் உடனே மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியான செயலா? மேடை நாகரிகம் தெரியாமல் அனைவரின் முன்பும் கால்களை ஆட்டிக் கொண்டிருந்தது சரியான செயலா? மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா? நான் பனையூரில் அலுவலகம் திறந்திருக்கிறேன்.
நீங்கள் அங்குவந்து என்னை பார்க்கலாம் என்பது சரியான செயலா? தொடர்புக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்தது சரியான செயலா? நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? அழகான ஆளுயர கண்ணாடி என்ற கட்சியை ஒரேநொடியில் உடைத்து நொறுக்கியது யார்? கட்சியை ஒரு நொடியில் உடைத்ததை உலகம் முழுவதும் உள்ள ஆன்றோர்களும், சான்றோர்களும், அரசியல் ஆளுமைகளும், எதிர்க்கட்சிகளும், ஊடக நண்பர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லையே என பெரிதும் வருந்தினார்கள்.
கடந்த 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு நடத்தினேன், நடத்தி வந்தேன். அதற்கு ஒரு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார். கடந்த காலங்களில் நான் அடைந்த அவமானங்களும், அவலங்களும், ஏச்சுப்பேச்சு ஏளனம், எள்ளி நகையாடல்களும், ஈட்டி போன்ற இழி சொற்களையும் இந்த ஊமை ஜனங்களுக்காக நான் கடந்து விட்டேன். இன்று எதிர்பாராத வகையில் வளர்த்த கிடாவே மார்பில் வீறுகொண்டு இடித்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன்.
ஆனால் ஒன்று, இதையும் நான் வெற்றியோடு கடந்து செல்வேன். உங்கள் தாயை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள். கடவுள் என்று சொல்வீர்கள். பொங்கல் நேரத்தில் முகுந்தன் சமாச்சாரத்தை குடும்பத்துடன் அமர்ந்து பேசினோம். அப்போது சரஸ்வதி அம்மா, உன்னுடைய மகளுக்கு பதவி கொடுத்திருந்தால் அமைதியாக இருந்திருப்பியா, உனது 2வது மகளை போட்டிருந்தால் சம்மதம் தெரிவித்து இருப்பாயா? என்றார். உடனே அங்கிருந்த பாட்டிலை தூக்கி அம்மா மீது வீசி அடித்தார்.
நல்லவேளை அது அவர் மீது படவில்லை, சுவற்றில் பட்டுவிட்டது. எதுக்காக சொல்கிறேன். இதெல்லாம் வெறும் சாம்பிள்.அதேபோல் நிர்வாக குழுவில் ஒருத்தர் பேசினார். உடனே அவரை உட்கார வைத்தார். இதுவா நிர்வாகக் குழு. நீங்க இப்படி பேசுங்க என்று சொல்லி கொடுத்து பேசுவதற்காகவா நிர்வாகக் குழு. வெறேன்ன பேசப்போகிறார்கள். கட்சி வளர்ச்சியைப் பற்றிதான் பேசுவோம். 19 பேரில் ஒருத்தரிடம் கூட நான் பேசவில்லை.
அப்பதான் நான் சொன்னேன், ‘உனக்கு தலைமைப் பண்பு கொஞ்சம்கூட இல்லை’ என்று. ஒரு தலைவர் என்ன செய்யணும். ஒவ்வொருவரும் தங்களது கருத்தை சொல்லுங்கள். நான் குறித்து வைத்துக் கொண்டு பதில் சொல்கிறேன் என்று அல்லவா கூறியிருக்க வேண்டும் என அன்புமணியிடம் சொல்லி இருக்கிறேன். ஆனால், ஒருத்தர் பேச ஆரம்பித்தார், அவரையும் கடித்து குதறிவிட்டார். இதுதான் நிர்வாகக் குழுவின் லட்சணம். இவ்வாறு அவர் கண்ணீர்விட்டு தெரிவித்தார்.
* யார் வளர்த்த கட்சி எனக்கே ஆர்டர்ஸா?
கட்சியின் வளர்ச்சிக்காக தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களுக்கு நான் போயிட்டு வரலாம் என்று போனேன். எனக்கு மனசும் ஒரு மாதிரியாக இருந்தது. எனக்கு பிடித்த மாவட்டம் தர்மபுரி, சேலம். சேலத்தில்தான் எனக்கு தலைமை நிலையத்தை ஆபீசை வாங்கி கொடுத்தார்கள். இதனால் அங்கு போகலாமே என ஆரம்பித்தேன். அதற்கு அங்கு மைக் வைத்து நான் பேசக்கூடாது, 200 பேருக்குமேல் கூடக் கூடாது. நானும் வருவேன். என்னை (ராமதாசை) பார்க்க விரும்புகிறவர்கள் நான் தங்கியிருக்கும் உணவு விடுதியில் தான் பார்க்க வேண்டும் என்று கட்டளை. யாருக்கு, இந்த கட்சியை ஆரம்பித்த நிறுவனருக்கு.
திருமண மண்டபம் கூடாது, தங்கியிருக்கும் அறையில் இருந்து கொண்டு நிர்வாகிகளை சந்திக்க வேண்டும். இதெல்லாம் ஆர்டர். நிறுவனருக்கு போட்ட ஆர்டர்ஸ். இவை கட்சிக்கு தடையாக உள்ளது. நான் உங்களை கேட்கிறேன். யார் உழைத்து வளர்த்த கட்சி. யார், யாருக்கு கட்டளை இடுவது. 95 ஆயிரம் கிராமங்களுக்கு சோறு தண்ணீர் இல்லாமல் அத்தனை கிராமங்களுக்கு சென்று வந்த கால்கள் என் கால்கள். அப்போது பஸ் எல்லாம் கிடையாது. காடு மேடு, வரப்பு, இரவு நேரங்கள், ஒத்தையடி பாதை. அப்படி பாடுபட்டு நான் வளர்த்த கட்சி.
* அடிக்கிறதுக்கு ஆள் வைத்தேனா?
நேற்று (நேற்று முன்தினம்) சமூக ஊடக பேரவை கூட்டம். அந்த கூட்டத்துக்கு 6 பேரை அடிக்கிறதுக்கு வைத்திருக்கிறார். சிவப்பிரகாசம், ஜிகே மணி, என்னைப்பற்றி தவறு தவறாக சிலர் போட்டிருந்தனர். அந்த கூட்டத்துக்கு வருபவர்களை 6 பேர் வைத்து அடிக்கப் போகிறார் என்று. 32 மாவட்டத்துக்கும் போய் அவர்களுடன் கூட உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அளவளாவி வந்த நான், இதுபோன்ற அடிதடிகளில் நான் போனதுகூட கிடையாது. இப்படி சொல்லி இருக்கிறார். இருப்பினும் 100 பேர் நேற்று வந்துவிட்டனர். இப்படி கூசாமல் பொய் வந்துவிழும். ஆனால் அன்புமணி பொய் பேசுவது கிடையாது என்கிறார்.
* யாரையுமே பேச விடமாட்டார்
கட்சியின் நிர்வாக கூட்டத்தில் யாருடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அன்புமணி ஏற்பதில்லை. வெளிப்படுத்த வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை. நிர்வாகத்தில் 19 பேரில் ஒருவர் பேச ஆரம்பித்தால் கூட பேசக்கூடாது என்பார். ஆனால் நான் ஒவ்வொரு கூட்டத்திலும் என்னை விமர்சியுங்கள், தவறு இருந்தால் நான் திருத்திக் கொள்கிறேன் என்பேன். தயக்கம் இருந்தால் கடிதம் மூலமாவது எழுதுங்கள் என்றிருக்கிறேன். இப்படி எந்த தலைவரும் சொல்லி இருக்க மாட்டார்கள். ஆனால், நான் சொன்னேன், தவறு இருந்தால் என்னை திருத்திக் கொள்கிறேன் என்று. அப்போது இந்த செல்போன் எல்லாம் கிடையாது. அப்படியெல்லாம் நான் இந்த கட்சியை வளர்த்தேன்.
* அன்புமணிக்கு தலைவராக பட்டாபிஷேகம் எப்படி?
அன்புமணியை தலைவராகவும், ஜி.கே.மணியை கவுரவ தலைவராகவும் போடப்பட்ட சம்பவத்தை நீங்கள் கேள்விப்பட்டீர்கள் என்றால், இப்ப நான் சொல்கிறேன், கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். நான் மகாபலிபுரத்தில் எனக்கு மனசு சரியில்லாத நிலையில் டான் ஓட்டலில் போய் தங்கியிருந்தேன். சரி 8 நாள் அங்கு தங்குவோம் என்று சென்றிருந்தேன். இதை யாரிடமும் நான் சொல்லவில்லை. எப்படியோ தெரிந்து எனது மருமகள் அங்கு வந்தார். மாமா என்றார், என்னம்மா என்றேன்.
அவர் வந்து என்னை சந்தித்தது புதன்கிழமை. அடுத்த புதன்கிழமை நாள் நன்றாக இருக்கிறது. மண்டபம் பார்த்துவிட்டேன், எல்லா ஏற்பாடுகளும் பண்ணி விட்டேன். தலைவரை மாற்ற வேண்டும் என்றார். வெறும் 8 நாளில் சாதாரணமாக ஒரு ப்யூன், வேலைக்காரருக்குகூட ஒருமாதம் வரை டைம் கொடுப்பார்கள். ஆனால் இவர் 8 நாளில் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டேன் என்றார். உடனே நான் அப்போதைய தலைவர் ஜிகே மணியை வரச்சொல்லி மருமகள் சொன்ன இவ்விஷயத்தை சொன்னேன். அவர் உடனே தனது மைத்துனர், தம்பி உள்ளிட்டோரிடம் சொல்லி உள்ளார்.
ஜிகே மணிக்கு ஜோஷியம், கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் அவர்கள் இவரிடம் உங்களுக்கு ஒன்றரை மாதத்துக்கு கிரகம் சரியில்லை. அதன்பிறகு செய்யுங்கள் என்று கூறியதாக என்னிடம் வந்து இப்படி சொன்னார். நானும் மருமகளை அழைத்து இதை சொன்னேன். அவரும் சரிமாமா என்றார். அதன்பிறகு ஒன்றரை மாதம் கழித்து அதே பட்டாபிஷேக தினம் வந்தது. நான் பட்டாபிஷேகத்தில் அவரை கட்டிப்பிடித்து இவரை அறிவித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். அப்போது நான் ஒரு செய்தியை சொன்னேன். எனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் எந்த கூட்டத்துக்கும் போக வேண்டாம் என்றேன். இது கட்சி, சங்கம் ஆரம்பிக்கும்போதே இருந்ததுதான்.
* ‘எனது குலதெய்வம் ராமதாஸ் – எதிர்காலம் அன்புமணி’ இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் திடீர் விலகல்
பாமகவில் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் முற்றியதற்கு காரணமே அவரது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமித்ததுதான் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அன்புமணி குறித்து சரமாரி குற்றச்சாட்டுகளை கூறி ராமதாஸ் பேட்டியளித்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி செயல் தலைவரான அன்புமணிக்கு மாநில இளைஞரணி தலைவரான முகுந்தன் பரசுராமன், அனுப்பியுள்ளார்.
அதில், ‘பாமக இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28-12-2024ல் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள முகுந்தன், என்றென்றும் எனது குலதெய்வம் ராமதாஸ்தான். அன்புமணிதான் எங்களின் எதிர்காலம் என்ற உணர்வுடன் கட்சிப் பணியாற்றுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி மோதல் கடுமையாக முற்றியுள்ள நிலையில், அக்கட்சி உடையும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பாமக உடைய தான் காரணமாகி விடக்கூடாது, கட்சிக் காரர்களின் கோபம் தனது பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதால் முகுந்தன் ராஜினாமா செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
* அன்புமணி ஆதரவு 25 மாவட்ட செயலாளரை மாற்ற அதிரடி முடிவு
அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய ராமதாஸ் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவும், அன்புமணிக்கு ஆதரவாக உள்ள மாவட்ட செயலாளர்களை மாற்றவும் ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராமதாஸ் நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார். இதில் முதல் கட்டமாக 25 மாவட்ட செயலாளர்களை மாற்றுவது என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணியை ராமதாஸ் முடுக்கி விட்டுள்ளார்.
*சென்னையில் இன்று முதல் அன்புமணி ஆலோசனை
பாமகவில் முழு அதிகாரத்தையும் தானே வைத்திருக்க வேண்டும் என்று அன்புமணி விரும்பினார். ஒன்றிய அமைச்சர் பதவி, எம்பி பதவி என எல்லாமும் தனக்கும் தனது மனைவிக்கும் கிடைக்க வேண்டும் என்று செயல்பட்டுள்ளார். அதேசமயம் ராமதாஸ், தனது மகள் வழி பேரனுக்கும் கட்சியில் பதவி வழங்க விரும்பி, முகுந்தனை இளைஞர் அணி தலைவராக்கினார். இதற்கு அன்புமணி முட்டுக்கட்டை போட்டதால் தந்தை, மகன் இடையே மோதல் முற்றியது.
இதனால் கோபமடைந்த ராமதாஸ் அவரை செயல் தலைவராக மாற்றினார். அப்போதும் அன்புமணி பணிந்து போகாமல், என்ன குற்றம் செய்தேன் என்று கேள்வி எழுப்பியதால், அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி ராமதாஸ் நேற்று பேட்டியளித்தார். தேவைப்பட்டால் பொதுக்குழு கூட்டி அன்புமணியை நீக்குவேன் என்றும் கூறினார். தனது தந்தை கூறிய எந்த குற்றச்சாட்டுக்கும் அன்புமணி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தந்தையே இப்படி கூறியதால் அன்புமணி கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், எந்த விளக்கமும் அளிக்காமல் அவர் மவுனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் ராமதாசின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கு மத்தியில் பாமக நிர்வாகிகளுடன் இன்று முதல் அன்புமணி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை, பனையூர் அலுவலகத்தில் இன்று முதல் ஞாயிறு வரை பாமக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை அன்புமணி சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது ராமதாசின் சரமாரியான குற்றச்சாட்டு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தகட்டமாக, எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நிர்வாகிகளிடம் அவர் ஆலோசிக்க உள்ளார். நிர்வாகிகள் தெரிவிக்கும் முடிவுகளின் அடிப்படையில் அன்புமணியின் முடிவு இருக்கும் என்று தெரிகிறது. ஒருவேளை தனக்கு இருக்கும் ஆதரவை பயன்படுத்தி கட்சியை கைப்பற்ற அன்புமணி புதிய திட்டம் வகுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அன்புமணியின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
* இரண்டாக உடையும் பாமக பின்னணியில் பாஜ
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜவுடன் பாமக கூட்டணி நிலைபாட்டை அன்புமணி எடுத்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை போட்டபோதே அன்புமணியையும் அழைத்து ஒப்பந்தம் போட முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் இனி தலைவர் நான்தான் என்றும், அன்புமணி செயல்தலைவர் என்றும் அறிவித்து பாஜவிற்கு ராமதாஸ் தற்காலிகமாக செக் வைத்துவிட்டார்.
அதேசமயம், தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் நீடிக்கவும், கண்டிப்பாக ஒன்றிய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும், உங்கள் மீதான வழக்கையும் பார்த்துக் கொள்கிறோம் என்றும் பாஜ தரப்பிலிருந்து அன்புமணியிடம் பேசப்பட்டதாக தகவல் கசிந்தது. பாஜவின் இந்த மிரட்டல், பதவி ஆசைக்குட்பட்டுதான் தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்க அன்புமணி முடிவெடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் தோட்டத்தை முற்றிலும் புறக்கணித்து பாசத்தைவிட பதவிதான் முக்கியம் என்று அன்புமணி சூசகமாக தந்தைக்கு நிரூபித்துள்ளார்.
பாஜ கூட்டணியில் பாமக இடம்பெறும் நிலையில் அதிமுக தரப்பில் ராஜ்யசபா சீட்டு சவுமியா அன்புமணிக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ராமதாஸ் கடுமையாக விமர்சனத்தை முன்னெடுத்து விட்டதால் பாமக இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தந்தை, மகன் சண்டையால் யார் பக்கம் போவது என்பது தெரியாமல் பாமகவினர் விழிபிதுங்கி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் தந்தை, மகன் சண்டை பாமகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பாமகவினர் குமுறி வருகின்றனர்.
* சமாதான முயற்சி தோல்வி
பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளது பாமகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவதாகவும், அன்புமணிக்கு ஆதரவாக உள்ள 25 மாவட்ட செயலாளர்களையும் நீக்க போவதாகவும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று மாலை ராமதாசை சந்தித்த கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், சமூக முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் சிவப்பிரகாசம், சங்க மாநில பொதுச் செயலாளர் பரந்தாமன், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் புகழேந்தி ஆகியோர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ராமதாசிடம் பேசி அவரை சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் அனைவரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு ெசன்றனர். அப்போது நிருபர்கள் ஜி.கே.மணியிடம் கேட்டபோது, ‘நாளை மீண்டும் வருகிறேன். இதுகுறித்து பதில் சொல்கிறேன்’ என்று கூறியபடி சென்றார்.
* தமிழ்குமரனுக்கு தடையாக இருந்தவர் குருவை கீழ்த்தரமாக நடத்தியவர்
அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்து வந்தார். நிறைய உள்ளது, ஒன்றிரண்டு மட்டும்தான் சொல்கிறேன். தமிழ்குமரன் (திரைத்துறையில் இருப்பவர்), ஜி.கே.மணியின் பிள்ளை. அவருக்கு இருந்த சினிமா, உலக நட்புகளும், விளம்பரமும், பொருளாதாரமும் இயக்கத்துக்கு பயன்பட்டு, இயக்கம் வளரும் என்ற எண்ணத்துக்கு தடையாக நின்று நிராகரித்தார் அன்புமணி. அவரை நியமனம் செய்து நான் கடிதம் கொடுக்கிறேன்.
அவர் வாசல்படியை தாண்டவில்லை. அண்ணன் (அன்புமணி), உங்களை பார்த்து ஆசிபெற வேண்டும் என்று தமிழ்குமரன் கேட்க, கடிதத்தை கிழித்து போடச் சொல்லி அன்புமணி கூறினார். 2 மாதம் பிரச்னை, தொல்லை தாங்கவில்லை. சங்கமித்ராவில் ஒரு பொதுக்குழு நடந்தது. அந்த பொதுக் குழுவுக்காக அவரும், அவருடைய மனைவியும், குழந்தைகளும் புதுச்சேரி விடுதியிலேயே முதல்நாள் இரவே வந்து தங்கி விட்டனர்.
நான் காலை 7 மணிக்கு எழுந்தவுடன் அன்புமணி எனக்கு போன் செய்து தமிழ்குமரன் அந்த பொதுக் குழுவுக்கு வரக்கூடாது என என்னிடம் கூறினார். இருந்தாலும் நான் அவர்களிடம் சொல்லவில்லை. அந்த குடும்பம் எவ்வாறு வருந்தி இருக்கும், கண்ணீர் சிந்தி இருக்கும். அவர் எவ்வளவு அவமானப்பட்டு இருப்பார். இதுதொடர்பான விமர்சனங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
அதன்பிறகு 2 மாதம் கழித்து ராஜினாமா செய்து விட்டார். அதே செயல்தான் முகுந்தனுக்கும் நடந்தது. முகுந்தனுக்கு மேடையிலேயே நடந்தது. இதேபோல், மாவீரன் குருவை கீழ்த்தரமாக நடத்திய விதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இன்னும் இன்னும் பல. இதையெல்லாம் பார்த்த நான் நிர்வாகக் குழுவிலேயே நேருக்கு நேராக அன்புமணிக்கு தலைமைப் பண்பு அறவே இல்லை என்று சொன்னேன்.
* பாஜவுடன் கூட்டணி வையுங்க…இல்லைன்னா எனக்கு கொள்ளி வையுங்க…
பாஜவுடன் கூட்டணி அமைந்தது எப்படி என்பது குறித்து ராமதாஸ் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் என்னை சந்தித்து பேசினர். அதன்பிறகு நான் அதிமுகவுடன் நிலைப்பாடு ஏற்பட்டு அன்புமணியை அழைத்து இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கூட்டணி குறித்து முடிவு செய் என அறிவுறுத்தினேன். அதையும் அவர் கையிலேயே ஒப்படைத்தேன்.
ஆனால், அடுத்த நாள் என்னிடம் அன்புமணி மற்றும் சவுமியா ஆகியோர் வந்து என் கால்களை பிடித்துக் கொண்டு, ‘நான் பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவெடுத்து விட்டேன். இதனால் இதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அமைந்தால்தான் எனது எதிர்காலம். மீறினால் நீங்கள் எனக்கு கொள்ளி வைக்க வேண்டியது இருக்கும்’ என்று கண்ணீர் மல்க கெஞ்சினர். இதற்காக குடும்பத்தினரும் கூறினர்.
இதனால் நான் எனது கட்சியின் அனைத்து கோட்பாடுகளையும் மீறி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறினேன். ஆனால் நான் அடுத்த நாள் காலையில் எழுந்து 7.30 மணியளவில் பல்துலக்க சென்றேன் கிளம்புவதற்குள் வெளியில் பாரத் மாத்தா கி ஜே என்ற கூக்குரல் கேட்டது. அப்போது தான் தெரிந்தது, அண்ணாமலை இங்கு வந்திருக்கிறார் என்று. அவருக்கு தடால்புடலாக விருந்துகளும் தயாரானது. இவை அனைத்துமே என்னுடைய கவனத்துக்கு வராமலேயே அன்புமணி தயார் செய்தது.
அனைத்து நாடகங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன்படியே பாஜகவுடன் கூட்டணி அமைந்தது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 3 தொகுதிகளில் நாங்கள் வெற்றிபெற்று இருப்போம். அதிமுகவுக்கு 6 தொகுதிகள் கிடைத்து இருக்கும். அதிமுக மற்றும் பாமக கூட்டணி தான் இயல்பானது. ஆனால், அனைத்தையும் அன்புமணி வீணாக்கினார் இவ்வாறு அவர் கூறினார்.
* நான் செத்துப்பிழைத்தவன் என நிரூபிக்க நீச்சலடித்தேன்
அன்புமணி பொய் கூசாமல் பேசுவார். அதில் ஒரு பொய்யை மட்டும் சொல்கிறேன். 108 பேர் மாவட்ட செயலாளர்கள். அவர்கள் அனைவரிடமும் சொல்லி ஐயா போட்ட கூட்டத்துக்கு (16ம்தேதி) போகக் கூடாது என்று சொல்லி உள்ளார். அதில் 8 பேர் மட்டும்தான் வந்தார்கள். மற்ற 100 பேருக்கு இவரே போகாதீங்க… என்று சொல்லி உள்ளார். ஏன்? என்று கேட்டபோது என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஐயா எடுக்கப் போகிறார்கள் என்று கூறவே அவர்கள் நின்று விட்டனர்.
8 பேர் மட்டுமே வந்தனர். அன்றே நான் செத்து போய்விட்டேன். அவர்கள் அனைவரையும் போட்டவரே நான்தான். எம்ஜிஆர் பாடல் வரியில் வருவதுபோல் மறுநாளே நான் செத்து பிழைத்து விட்டேன் என்று காட்டத்தான் நீச்சலடித்தேன். இதுஒரு பொய். அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்பது கற்பனைகூட செய்ய முடியாது. நீங்ககூட சொல்லுங்க. கற்பனை செய்யக் கூட முடியாது. இதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா? கட்சி ஏற்குமா, மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
* பொதுக்குழு கூட்டி அன்புமணியை நீக்குவேன்
என்னை நீக்க பொதுக்குழுவிற்கு தான் அதிகாரம் உள்ளது என அன்புமணி சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு எப்போது வேண்டுமானாலும் பொதுக்குழு கூட்டி முடிவை தெரிந்து கொள்ளலாம் நான் பொதுக்குழுவை கூட்ட தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கம் செய்வேன்.
நிறுவனர் என்ற அதிகாரம் எனக்கு உள்ளது. மாநில செயற்குழு நிறுவனரால் அழைக்கப்பட்டு அவரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கூட்டங்களை நடத்த வேண்டும் என கட்சி பைலாவில் உள்ளது. (அப்போது பாமக கட்சி ஆரம்பித்த போது செய்யப்பட்ட அனைத்து சட்ட தீர்மானங்களையும் பொதுவெளியில் வெளிப்படையாக காட்டினார் ராமதாஸ்).
* எனக்கு 14 பஞ்சாயத்து நடந்துச்சு.. ராமதாஸ் கண்ணீரோ கண்ணீர்
பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், எனக்கு 14 பஞ்சாயத்துக்கள் வைத்தார்கள். நான் பசுமைத் தாயகம், சமூக முன்னேற்ற சங்கம் என 34 துணை அமைப்புகளை உருவாக்கி இருக்கிறேன். அவர்கள் வந்து எனக்கு பஞ்சாயத்து பண்ணினார்கள். ஏன் பஞ்சாயத்து முடியல்லன்னா, கடைசியில் கட்சியை ஐயா (ராமதாஸ்) பார்த்துக் கொள்ளட்டும்.
நீங்கள் (அன்புமணி) வெளியில் மக்களை பாருங்கள் என்று 14 பஞ்சாயத்துக்காரரும் இதைத்தான் சொன்னார்கள். ஆனால் இவர் (அன்புமணி) என்ன எதிர்பார்த்தார் என்றால் கேட்டை சாத்திவிட்டு நான் யாரையும் பார்க்கக் கூடாது, உள்ளேயே இருக்க வேண்டும் என்று. இதுவரை நான் இதை சொல்லி இருப்பேனா? இதுதான் பஞ்சாயத்து என்றார். அப்போது ராமதாஸ் கண்கலங்கினார்.
The post பெற்ற தாய் என்றும் பாராமல் அன்புமணி பாட்டிலால் தாக்கினார் ராமதாஸ் கண்ணீர்விட்டு கதறல்: வளர்த்த கிடா மார்பில் பாய்ந்துவிட்டது, மூச்சு விடாமல் பொய் பேசுபவர் appeared first on Dinakaran.