50 ஆண்டுகளாக வளர்த்த கட்சியை ஒரே நொடியில் உடைத்தவர்; தாயை தாக்க முயன்றவர் அன்புமணி: பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு!!

விழுப்புரம்: தவறு செய்தது அன்புமணி அல்ல; 35 வயதில் அவரை ஒன்றிய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என ஜி.கே.மணி கூறிவந்த நிலையில் மோதல் முற்றியது. இந்நிலையில், இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன்: ராமதாஸ்
தவறு செய்தது அன்புமணி அல்ல; 35 வயதில் அவரை ஒன்றிய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன். ஆதாரத்துடன் ஒளிவு மறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்த விரும்புகிறேன்
தவறு செய்தவர் அன்புமணி தான்; தவறான ஆட்டத்தை துவக்கி வைத்ததும் அன்புமணி தான்.

அன்புமணி குற்றச்சாட்டு திசை திருப்பும் செயல்
அன்புமணியின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் செயல். தான் செய்த செயலை மறைத்து கட்சியினரிடமும், மக்களிடமும் அனுதாபம் பெற அன்புமணி முயற்சி செய்கிறார்.

அன்புமணி செயல் சரியானதா?: ராமதாஸ்
புதுச்சேரி பொதுக்குழுவில் என்ன நடந்தது என்று உலகமே பார்த்தது; மேடை நாகரிகத்தை கடைபிடிக்காதது யார்?. முகுந்தனை இளைஞர் சங்க தலைவராக அறிவித்தபோது மைக்கை தூக்கி டேபிளில் வீசியது சரியான செயலா?. பொதுக்குழு மேடையில் என் தலை மீது அன்புமணி மைக்கை போடாதது தான் குறை. பாமக எனும் அழகான கட்சியை கண்ணாடி போல் ஒரே நாளில் நொறுக்கினார் அன்புமணி.

அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை
அழகான கட்சியை உடைத்தது யார்?; அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என அனைவரும் தெரிவித்தனர். கட்டுக்கோப்பாக நடத்திவந்த கட்சியை அன்புமணி அவமானப்படுத்திவிட்டார். மேடை நாகரிகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு இருந்தது சரியான செயலா?. அழகான, ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் உடைத்தது யார்?.

வளர்த்த கிடாவே மார்பில் எட்டி உதைத்துவிட்டது: ராமதாஸ்
பா.ம.க.விற்கு அன்புமணி களங்கம் ஏற்படுத்திவிட்டார்; வளர்த்த கிடாவான அன்புமணி என் மார்பில் பாய்ந்துவிட்டார். தலைமைப் பண்பு அன்புமணிக்கு கொஞ்சம் கூட இல்லை. ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனின் நியமனத்தை அன்புமணி கிழித்து போட்டார்.

என்னை குற்றவாளியாக்கி அனுதாபம் தேட முயற்சி
என்னை குற்றவாளியாக்கி அனுதாபம் தேடப் பார்க்கிறார் அன்புமணி. கட்சியில் யாருடைய ஆலோசனைகளையும் அன்புமணி ஒருநாளும் ஏற்றதே இல்லை. பனையூர் அலுவலகத்தில் என்னை வந்து பாருங்கள் என்று அன்புமணி கூறியது சரியா?. 4 சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்?. பாமக வளர்ச்சிக்கு இடையூறாக பல தவறுகளை அன்புமணி செய்தார்; தன் தாயின் மீதே பாட்டிலை தூக்கி அடித்தவர் அன்புமணி என அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

The post 50 ஆண்டுகளாக வளர்த்த கட்சியை ஒரே நொடியில் உடைத்தவர்; தாயை தாக்க முயன்றவர் அன்புமணி: பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: