பணம், கொடுக்கல் வாங்கல் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து

கோவை, மே 29: கோவை கெம்பட்டி காலனி 2வது தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ்(30). இவர், அதே பகுதியை சேர்ந்த அபி என்பவரிடம் ரூ.14 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால், அந்த பணத்தை திருப்பி கொடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால், பொன்ராஜூக்கும், அபிக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் அபி செல்போனில் தொடர்பு கொண்டு பொன்ராஜை ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வரவழைத்தார். அங்கு லாலிரோடு டாஸ்மாக் கடை அருகே அபி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் இருந்தனர். அப்போது பணம் தொடர்பாக அபிக்கும், பொன்ராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அபி உட்பட 3 பேர் பொன்ராஜை அடித்து உதைத்தனர். மேலும், கத்தியால் குத்தியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் அபி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பணம், கொடுக்கல் வாங்கல் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Related Stories: