பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவர் என்.ரவிகுமார், கல்புர்கி துணை ஆணையர் பாகிஸ்தானில் இருந்து வந்தவரா? என்று கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநில எதிர்க்கட்சித் தலைவர் சாலவாடி நாராயணசாமி, கடந்த 21ம் தேதி சித்தாபூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், காங்கிரஸ் தொண்டர்களால் முற்றுகையிடப்பட்டார். அப்போது அவர் விருந்தினர் மாளிகையின் உள்ளே அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவர் என்.ரவிகுமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது என்.ரவிகுமார், கல்புர்கி துணை ஆணையர் பவுஸியா தரன்னும் என்ற முஸ்லிம் ஐஏஎஸ் அதிகாரி ‘பாகிஸ்தானில் இருந்து வந்தவரா?’ என்று கேள்வி எழுப்பி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
இதற்கு முன்பு, சாலவாடி நாராயணசாமி, கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவை நாயுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்து கூறியிருந்தார். இந்நிலையில் என்.ரவிக்குளாரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அவர் பத்திரிகை அறிக்கை மூலம் மன்னிப்பு கோரினார். தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், துணை ஆணையரின் நேர்மை மற்றும் திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறினார். ஆனால், பிரியங்க் கார்கே இந்த கருத்து ‘மிகவும் அருவருப்பானது’ என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘பாஜக தலைவர்களின் பேச்சு அவர்களின் தவறான மனநிலையை காட்டுகிறது.
ஒரு மதிப்புமிக்க அதிகாரியை இப்படி பேசுவது ஏற்க முடியாது’ என்று கூறினார். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும் என்.ரவிகுமாரின் கருத்தை கண்டித்து, அவர் மன்னிப்பு கோரவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, கல்புர்கி காவல்துறை என்.ரவிக்குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
The post கல்புர்கி துணை ஆணையர் பாகிஸ்தானில் இருந்து வந்தவரா?.. சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர் மீது வழக்கு appeared first on Dinakaran.