ஒடுகத்தூர், மே 27: ஒடுகத்தூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயதுடைய மைனர் பெண். இவர் 10ம் வகுப்பு முடித்து அதில் தேர்ச்சி பெற்று வீட்டில் இருந்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் நாகராஜன்(26),கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நாகராஜிக்கும் மைனர் பெண்ணுக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நாகராஜன் மைனர் பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
அதேபோல், தன்னை காதலிக்கும்படியும் நாகராஜன் அந்த மைனர் பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், காதலிக்கவில்லை என்றால் தான் தற்கொலை செய்துகொள்வதாக அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடத்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மைனர் பெண்ணை மிரட்டியும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியும் நாகராஜன் கடத்தி சென்றுள்ளார்.
இதுதொடர்பாக, மைனர் பெண்ணின் பெற்றோர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் தாமதமாக வழக்கு பதிவு செய்ததாகவும், சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறுகையில், அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி மனதை மாற்றி கடத்தி சென்றுள்ளார். ஏற்கனவே அவருக்கு திருமணமாகி விட்டது. எனது மகளிடம் இதற்கு முன் பிரச்சனை செய்து வந்துள்ளார். அப்போதே நாங்கள் அவனை கண்டித்து விட்டோம். தனது மகளை கடத்தி சென்றதாக வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளோம். ஆனால், 4 நாட்கள் ஆகியும் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும், உரிய விசாரணையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே, உயரதிகாரிகள் இதில் தலையிட்டு தனது மகளை விரைந்து மீட்டு தர வேண்டும், என்றார்.
The post ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை கடத்திச் சென்ற திருமணமான வாலிபர் ஒடுகத்தூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக appeared first on Dinakaran.