நிதி ஆயோக்கூட்டத்திற்கு செல்கிறேன் எனச்சொல்லிவிட்டுச் சென்றார் முதல்வர் கட்சி அலுவலகத்தை பார்க்கப்போகிறேன் என அமித்ஷா வீட்டுக்கு போனவர் அல்ல: அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் அமித்ஷாவுடன் பழனிசாமி சந்திப்பு நடப்பதற்கு முன்பே, 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா டிவீட் போட்டாரே பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே கூட்டணிக்கான அதிகாரத்தை அமித்ஷாவிடம் தாரை வார்த்ததை தவழப்பாடியார் மறந்துவிட்டாரா?

முதலில் அதிமுக அலுவலகம் பார்க்கப் போனேன் பிறகு மக்கள் பிரச்னைகளுக்காக அமித்ஷாவை சந்தித்தேன் என கலர் கலராக கம்பி மத்தாப்புகளை நீங்கள் கொளுத்திய போது அன்றைக்கு அதிமுக வட்டாரம் அறிவிக்கப்படாத தீபாவளியாக மாறியது. இப்படி உங்களின் ரீல்கள் அந்து போனதை மறைக்க, பொய்க் குப்பைகளை அள்ளி வீசி, தமிழ்நாட்டை அசுத்தம் செய்ய வேண்டாம்.

முதல்வர் தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு மற்றும் நியாயமான நிதி ஒதுக்கீடு பற்றி நேரடியாக வலியுறுத்தி இந்திய மக்கள் முன் எடுத்து வைக்க நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால், அதைத் திரித்து தனது அவதூறு அரசியல் குப்பைகளை அள்ளி வீசி தமிழ்நாடு அரசு மீதும் முதல்வர் மீதும் களங்கம் கற்பித்து விடலாம் என பழனிசாமி போட்ட கணக்கெல்லாம் தப்புக்கணக்கு ஆனதால், குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலச் சமாளிக்க நீங்கள் போடும் வேடங்கள் உங்களை இன்னும் தோலுரிக்கின்றன.

தனது ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காகத்தான் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்ற உண்மையை மறைத்துவிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் புரளிகளை அள்ளிவிட்டு குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

பாஜவுடன் கூட்டணி வைத்தால்தான் தோற்றோம் என்று நிர்வாகிகள் அலறித் துடித்த போதும் கூட அவர்களது கருத்துக்களை மதிக்காமல் பாஜவுடன் கூட்டணி வைத்தது தன் உறவினர்களை காப்பாற்றத்தானே பழனிசாமியின் கண்ணீர் நன்றாகப் புரிகிறது. தன்னுடைய மகன் மிதுனும் தன் உறவினர்களும் தப்பிக்கக் கட்சியைப் பலிபீடத்திற்குக் கொண்டு வந்த புண்ணியவான் தான் பழனிசாமி. நிதி ஆயோக் கூட்டத்திற்குச் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உங்களைப் போலக் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டு அமித்ஷா வீட்டுக்குப் போனவர் அல்ல எங்கள் முதல்வர்.

The post நிதி ஆயோக்கூட்டத்திற்கு செல்கிறேன் எனச்சொல்லிவிட்டுச் சென்றார் முதல்வர் கட்சி அலுவலகத்தை பார்க்கப்போகிறேன் என அமித்ஷா வீட்டுக்கு போனவர் அல்ல: அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: