பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை: காங்கிரஸ் கடும் தாக்கு

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியில் அறிவிக்கப்படாத அவரச நிலை நிலவுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 2011ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மோடி தலைமையிலான அரசு முதல் முறையாக பதவியேற்றது. இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஆட்சி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 140 கோடி மக்களில் ஒவ்வொரு பிரிவு மக்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நல்ல காலம் பிறக்கப்போவதாக உறுதியளித்து பாஜக ஆட்சிக்கு வந்ததாகவும் ஆனால் உண்மையில் மக்களுக்கு அது கனவாக வே உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் அளித்த மிகப்பெரிய வாக்குறுதிகள் எல்லாம் வெற்று அறிக்கைகளாவே உள்ளன. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட நிலையில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையை இழந்துள்ளனர் என்பது தான் எதார்த்தம் என கார்கே குறிப்பிட்டுள்ளார். உறுதியளித்தப்படி விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை மாறாக ரப்பர் புல்லட்டுகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்தார். மகளிர், நலிவடைந்த பிரிவினர் அடக்கு முறைக்கு உள்ளாவதாக கார்கே கூறியுள்ளார். பண வீக்கம் அதிகரிப்பு, மக்களிடமே வாங்கும் சக்தி குறைந்துள்ளது.

உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் make in india தோல்வி வெளிநாட்டு கொள்கையில் தோல்வி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாஜக அரசு மீது அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பு தூண்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தாக்குதல் நடத்துவதாகவும், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய தன்னாட்சி நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜன்சி நிலவுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பாதிவிட்டுள்ளார்.

The post பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை: காங்கிரஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: