மாதவரம்: மாதவரம் தணிகாசலம் நகரில் ரூ.91.36 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். மாதவரம் சட்டமன்ற தொகுதி, 29வது வார்டு, பொன்னியம்மன்மேடு பகுதியில் தணிகாசலம் நகர், முனுசாமி நகர், அன்னப்பூர்ணா நகர், பிரகாஷ் நகர், கற்பகம் நகர், தணிகாசலம் நகர் இ.பிளாக் போன்ற பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் தண்ணீர், தணிகாசலம் நகரில் உள்ள உபரிநீர் கால்வாய் வழியாக கடலில் கலக்கும்.
அதுமட்டுமின்றி கொளத்தூர் ஏரி, மாதவரம் ஏரி மற்றும் மாநகராட்சியில் உள்ள 16 கால்வாய்களின் உபரிநீரும் இந்த கால்வாயில் கலக்கும். ஆனால், பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால் மழைக்காலங்களில் இந்த கால்வாயில் இருந்து உபரிநீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்து வந்தது. இதனால், மேற்கண்ட பகுதி மக்கள் உடைமைகளை இழந்து அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு பெய்த பருவ மழையின் போது மாதவரம் தணிகாசலம் நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த உபரிநீர் கால்வாயை சீரமைக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், ரூ.91.36 கோடி செலவில் கொளத்தூர் மற்றும் மாதவரம் வட்டத்தில் உள்ள உபரி நீர் கால்வாயை அகலப்படுத்தி, மறுசீரமைக்க திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு, கடந்த 30.8.2023 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியை தொடங்கி வைத்தார். அதன்படி யுனைடெட் காலனி, செல்வம் நகர், சிவானந்தா நகர், ராமலிங்க காலனி, நாகாத்தம்மன் கோயில், குமரன் நகர், தணிகாசலம் நகர் மற்றும் சந்திரபாபு காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் கால்வாய் சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.
இதில் 2,170 மீட்டர் மூடிய கால்வாயும், கம்பி வெளியுடன் கூடிய 1,130 மீட்டர் திறந்தநிலை கால்வாயும் என 3,050 மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பான கால்வாய், 470 மீட்டர் வக்கவாட்டு தடுப்புச் சுவர், 9 சிறு பாலங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்டதன் மூலம் ஏற்கனவே 400 கன அடி மழை உபரி நீர் சென்ற கால்வாயில் தற்போது சுமார் 1000 கன அடி உபரி செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இந்த உபரிநீர் கால்வாயை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (27ம் தேதி) திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஏற்பாடுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு வெள்ள பாதிப்பு ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாக்க உபரி நீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், மண்டல குழு தலைவர் நந்தகோபால், கவுன்சிலர் கார்த்திகேயன் திருநாவுக்கரசு மற்றும் குடியிருப்பு நல சங்கங் நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
The post மாதவரம் தணிகாசலம் நகரில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.91.36 கோடியில் வடிகால் மறுசீரமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.