சைதாப்பேட்டையில் தண்ணீர் கேன் போடும் போது பள்ளி மாணவனை வெட்டிய சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது: தலைமறைவாக உள்ள 6 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சைதாப்பேட்டையில் பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஆடுதொட்டி பகுதியை சேர்ந்தவர் நாகபுஷ்பம். இவருக்கு சஞ்சய்(15) என்ற மகன் உள்ளார். சஞ்சய் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து 12ம் வகுப்பு செல்ல உள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடு பணியை செய்து வந்தார்.

இந்நிலையில் சஞ்சய்க்கும் அதே பகுதியில் வசித்து வரும் மனோஜ் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் சஞ்சய் அடிக்கடி அவர்களை கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் சேர்ந்து சஞ்சய்யை கொலை செய்யும் நோக்கில் நேற்று முன்தினம் ஆட்டோ மற்றும் 2 பைக்குகள் வந்து சஞ்சய்யை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த சஞ்சய் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் சைதாப்பேட்டை வினாயகபுரம் விஜிபி.சாலையை சேர்ந்த மனோஜ்(21) தனது நண்பர்களுடன் இணைந்து வெட்டியது தெரியவந்தது. அதைதொடர்ந்து மனோஜ் உட்பட 9 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோஜை கைது செய்தனர். மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சகோதரர்களான 2 சிறுவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரை இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post சைதாப்பேட்டையில் தண்ணீர் கேன் போடும் போது பள்ளி மாணவனை வெட்டிய சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது: தலைமறைவாக உள்ள 6 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: