ஒன்றிய அமைச்சர் மனைவிக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் சுகந்தா மஜூம்தார். மாநில பாஜ தலைவராகவும் இருக்கும் சுகந்தா மஜூம்தாரின் மனைவியான கோயல் மஜூம்தார் 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுகந்தா மஜூம்தார் மனைவி திருமணத்திற்கு முன் கோயல் சவுத்ரி என்ற பெயரில் ஜல்பைகுரியில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார்.

திருமணத்துக்கு பின் கோயல் மஜூம்தார் என்ற பெயரில் பாலுர்காட்டில் இன்னொரு வாக்காளர் அடையாள அட்டையும் பெற்றுள்ளார். இரண்டும் தனிதனி எண்களை கொண்டுள்ளன. படிவம் எண் 6 ஐ சமர்ப்பித்ததை தொடர்ந்து அவருக்கு புது வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது.

இதுகுறித்து சுகந்தா கூறுகையில், இந்த குளறுபடிக்கு மாவட்ட நிர்வாகம் தான் காரணம். மாநில அரசின் உத்தரவுகளின்படிதான் மாவட்ட கலெக்டர்கள் செயல்படுகிறார்கள் என்றார். ஒருவருக்கு 2 இடத்தில் ஓட்டு இருக்கக் கூடாது என்பது ஒன்றிய அமைச்சராக உள்ளவருக்கு தெரியாதா என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்விஎழுப்பியுள்ளது.

 

The post ஒன்றிய அமைச்சர் மனைவிக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: