தேசப்பக்தி உணர்வை வௌிப்படுத்தும் விதமாக மைசூர் ‘பாக்’கிலிருந்த பாக் நீக்கம்: மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றம்

ஜெய்ப்பூர்: தேசபக்தி உணர்வை வௌிப்படுத்தும் விதமாக இந்தியர்களின் பாரம்பரிய இனிப்பான மைசூர் பாக்-கிலிருந்த பாக் நீக்கப்பட்டு, மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் காரணம் என குற்றம்சாட்டிய ஒன்றிய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் மீதான கடும் கோபத்தின் விளைவாகவும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்தியர்கள் மிக விரும்பி சாப்பிடும் இனிப்பு வகையான மைசூர் பாக்-கின் பெயர் மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், மோத்தி பாக் – மோத்தி ஸ்ரீ, ஆம் பாக் – ஆம் ஸ்ரீ, கோந்த் பாக்- கோந்த் ஸ்ரீ, என மறுபெயரிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் பகுதியில் உள்ள இனிப்பு கடையின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின் கூறுகையில், “நமது சுவையான உணவுகள் நம் தேசத்தின் பெருமையையும் பிரதிபலிக்க வேண்டும். தேசபக்தியின் உணர்வு நம் எல்லைகளில் உள்ள வீரர்களிடம் மட்டுமல்ல, இந்தியர் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்.

இதனால் தற்போது பாரம்பரிய இனிப்புகளின் பெயர்களில் இருந்த பாக் என்ற பெயர் ஸ்ரீ என மாற்றி உள்ளோம். இந்த முடிவு மொழியில் சார்ந்தது இல்லை. உணர்வுப்பூர்வமானது. வாடிக்கையாளர்கள் இந்த பெயர் மாற்றத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.

The post தேசப்பக்தி உணர்வை வௌிப்படுத்தும் விதமாக மைசூர் ‘பாக்’கிலிருந்த பாக் நீக்கம்: மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: