கலைஞர் உரிமைத் தொகை பெற மே 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: கலைஞர் உரிமைத்தொகை பெற மே 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023 செப்டம்பரில் செயல்படுத்தப்பட்டு குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் 15ம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. தற்போதுள்ள 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகளில், இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடி 14 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகின்றனர்.

எனவே மீதமுள்ள தகுதியான குடும்ப அட்டைகளுக்கு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் ஜூன் முதல் வாரம் முதல் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்தார். இதை நடைமுறைப்படுத்தும் வகையில், வரும் 29ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

பெண்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனே ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த முறை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post கலைஞர் உரிமைத் தொகை பெற மே 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: