பாமகவில் மோதிக்கொள்ளும் இரு அணிகள்: பாஜ பக்கம் சாயும் அன்புமணி எதிர்க்கும் ராமதாஸ்; சமரசம் செய்யும் டெல்லி, அதிமுக தலைமை பரபரப்பு பின்னணி

தமிழகத்தில் வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணி மாறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. பாமகவின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டபிறகு பாஜ கூட்டணியில் தொடர்ந்து அக்கட்சி போட்டியிட்டு தோல்வியை தழுவி வருகிறது. குறிப்பாக திமுகவை தவிர்த்து அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைக்கும்போது வாக்கு வங்கி சரிவும், கட்சியின் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கும் பாமக தள்ளப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போது தொண்டர்கள், மாநில நிர்வாகிகளின் எதிர்ப்பை மீறி பாஜவுடன் அன்புமணி கூட்டணி வைத்தார். போட்டியிட்ட 10 இடங்களிலும் படுதோல்வியை தழுவியது. அன்புமணியை மிரட்டி கூட்டணிக்கு அடிபணிய வைத்ததாகவும், ஒன்றிய அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியை அடகுவைத்து விட்டதாகவும் அவர் மீது சொந்த கட்சியிலேயே குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி ஒன்றிய அமைச்சர் பதவியும் வழங்காமல் சாதாரண ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பதவியை வழங்கியது பாஜ. அன்புமணியின் அரசியல் நகர்வுகள் தைலாபுரம் தோட்டத்துக்கு பிடிக்காமல் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடில்தான் புத்தாண்டு பொதுக்குழுவில் ராமதாஸ் திடீரென்று தனது மூத்த மகளின் மகன் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிப்பதாக அறிவித்தார். ஆனால், மேடையிலேயே அன்புமணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தை, மகனுக்கிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அன்று மேடையில் ஏற்பட்ட மோதல் தற்போதுவரை அணையா விளக்காக எரிந்து கொண்டிருக்கிறது.

இதுஒருபுறமிருக்க கடந்த மாதம் திடீரென பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக்கு நான்தான் தலைவர் என்று அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த அறிக்கைக்கான பின்னணி கூட்டணி கணக்குதான் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணி வியூகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்தபோது அதிமுகவை மிரட்டி தனது கூட்டணிக்குள் மீண்டும் சேர்த்து விட்டார். அதேநாளில் பாமகவையும் தன்கூட்டணிக்குள் இழுக்க அன்புமணியிடம் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

இந்த தகவலை தெரிந்து கொண்டே ராமதாஸ் கடந்த மக்களவை தேர்தலைப் போலவே வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாமகவின் நிலை பூஜ்யமாகி விடக்கூடாது என்றுதான் அவசர அவசரமாக தலைவர் பதவியை தன்வசப்படுத்திக் கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல் கடந்த 11ம்தேதி மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டிலும் தனது மூத்த மகளின் மகன் முகுந்தன் கையை பிடித்துக் கொண்டு மேடைக்கு வந்த ராமதாஸ், அன்புமணியை மறைமுகமாக விமர்சித்து பேசினார். குறிப்பாக கூட்டணி விவகாரத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

அதை நான் பார்த்துக் கொள்கிறேன். திரும்பவும் சொல்கிறேன் என்று கூட்டணி முடிவை அழுத்தமாக பேசிவிட்டு சென்றார். இதனால் முழுநிலவு மாநாடும் தந்தை, மகன் மோதலில் முடிந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநாட்டை முடித்த கையோடு வீட்டிற்கு வந்த ராமதாஸ் தன் பலத்தை சோதிக்க மறுநாளே மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் ஒவ்வொரு அணியின் கூட்டத்தையும் கூட்டினார். முதலில் மாவட்ட தலைவர், செயலாளர் கூட்டத்தில் 10% பேர் மட்டுமே பங்கேற்றனர். அன்புமணி தைலாபுரம் கூட்டத்தை புறக்கணித்தது மட்டுமல்லாமல், மாவட்ட தலைவர், செயலாளர்களுக்கு மறைமுகமாக பங்கேற்க கூடாதென்று உத்தரவு போட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது ராமதாஸ், சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை, சீற்றம் அதிகரித்து கொண்டே இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து மகளிர் அணி, இளைஞர் அணி மற்றும் வன்னியர் சங்கம், சமூகநீதி பேரவை கூட்டத்தையும் ராமதாஸ் கூட்டி நடத்தி முடித்துள்ளார். இதிலும் குறைந்த அளவிலேயே நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்காமல் அன்புமணி புறக்கணித்தார். இதில் வன்னியர் சங்கம், சமூகநீதி பேரவையில் மட்டுமே பெருமளவில் நிர்வாகிகள் பங்கேற்று ராமதாஸ் பக்கம் நின்றுனர். கட்சியோ அன்புமணி பக்கம் என்று கூறப்பட்டது. இருப்பினும் ராமதாஸ் தனது நீச்சலடிக்கும் வீடியோவை வெளியிட்டு, சிங்கத்தின் கால்கள் பழுதும்படவில்லை, சீற்றமும் குறையவில்லை. கால்கள் பழுதுபடாததால் நீச்சல் அடித்துள்ளதாக கூறினார். ராமதாஸ் தன்னுடைய உடல் வலிமையை காண்பித்து எனக்கு வயதாகவில்லை என்று வீடியோ மூலம் அன்புமணிக்கு பதிலளித்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.

தற்போதுவரை தந்தை, மகன் மோதல் முடிவுக்கு வராததால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இவர்களை சமாதானப்படுத்தி ஒன்றுசேர வைப்பதற்குள் நாட்கள் கடந்து விடுமோ என்ற அச்சத்தில் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளனர். இரு அணிகளாக செயல்படுவதால் தேர்தல் கூட்டணியை முடிவு செய்வது யார்? பேரத்தை எப்படி நடத்துவது, யார் நடத்தப் போகிறார்கள் என்ற கேள்வியும் பாமகவில் எழுந்துள்ளது. பாமகவின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியான நிலையில் கட்சியில் உள்ள தொண்டர்கள் நிலையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேநிலை நீடித்தால் மாற்றுக் கட்சிக்கு செல்ல வேண்டிய முடிவில் சிலர் தயாராகி இருப்பதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே கட்சியின் அங்கீகாரத்தை இழந்து சரிவை நோக்கி செல்லும் பாமகவில் இருப்பதை தக்கவைக்க இருவரும் ஒருங்கிணைய வேண்டுமென்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். இதனால் பாமகவில் உள்ள தந்தை, மகன் மோதலை சமரசம் செய்யும் பணியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் ஒப்படைத்து உள்ளதாக கூறப்படுகிறது. பாமக இரண்டாக பிரிந்தால் வாக்குகள் சிதறும்.

எனவே, ராமதாஸை சமாதானம் செய்து கூட்டணியில் தொடர வையுங்கள் என்று அமித்ஷா, எடப்பாடிக்கு அசைன்மென்ட் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேலையில் அதிமுக தலைமை இறங்கி உள்ளது. பாமகவில் உள்ள முக்கிய தலைவர் மூலமாக ராமதாஸை சமரசம் செய்து பாஜ கூட்டணியில் தொடர முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் தந்தை, மகனை ஒன்றுசேரவைக்கும் முயற்சியில் அதிமுக, பாஜ ஈடுபட உள்ளதாக வந்த தகவலை பாமக மூத்த நிர்வாகிகள் மறுத்துள்ளனர். அவர்களுடனான கூட்டணிதான் பிரச்னைக்கு காரணமாக இருக்கும்போது அவர்களின் தூதையும், சமாதானத்தையும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கமாட்டார் என்று சூசகமாக தொிவிக்கின்றனர்.

* தைலாபுரம் நோ ஒன்லி பனையூர்
பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்திய அனைத்து கூட்டங்களையும் புறக்கணித்த அன்புமணி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளாராம். இனி தைலாபுரம் தோட்டம் என்பதை மாற்றி பனையூரிலேயே கூட்டம் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம். கடந்த புத்தாண்டு பொதுக்குழு மேடையிலேயே தந்தை, மகனுக்கிடையே ஏற்பட்ட மோதலின்போது இனி என்னை பார்க்க பனையூர் வாருங்கள் என்று தன்னுடைய விலாசத்தையும், செல்போன் எண்ணையும் அன்புமணி தெரிவித்திருந்தார். தற்போது தைலாபுரம் தோட்டத்தில் நடக்கும் கூட்டங்களை புறக்கணித்து அங்கு செல்வதையும் தவிர்த்துள்ள அன்புமணி, இனிமேல் தான் வசிக்கும் பனையூரில் பாமக கூட்டங்களை நடத்த முடிவு செய்திருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* முகுந்தன் மூலம் ராமதாஸ் ‘ஸ்கெட்ச்’
கட்சிக்குள் அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தன் வந்தது முதல்தான் தந்தை, மகனுக்கிடையே மோதல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதற்கு குடும்ப பிரச்னைதான் காரணம் என்கின்றனர். இதுகுறித்து தைலாபுரம் தோட்டத்து வட்டாரம் கூறுகையில், ‘பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஏற்பட்டுள்ள சொத்து பங்கீடு பிரச்னைதான் கட்சியில் எதிரொலித்துள்ளது. எப்போதும் மகள்களை ராமதாஸ் விட்டுக் கொடுக்க மாட்டார். அனைவருக்குமான பங்கினை பகிர்ந்துதான் கொடுப்பார். ஆனால், அன்புமணி பனையூரில் செட்டில் ஆனபிறகு அவரது குடும்ப நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததால் அரசியல் வாரிசாகவும், எந்த பங்கீடாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள முகுந்தனை உள்ளே அழைத்து வந்துவிட்டால் எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் இருக்காது என்றுதான் அவரை கட்சிக்கு ராமதாஸ் அழைத்து வந்திருக்கிறார். ஆனால், இது அன்புமணிக்கு பிடிக்காமல் தொடர்ந்து மோதல் போக்கும், கூடவே கூட்டணி குறித்து முடிவு எடுப்பதும் தந்தை, மகன் மோதலை மேலும் அதிகரித்து தொடர்கிறது என்று தெரிவித்தனர்.

* தந்தை மகன் மோதலால் இரு அணிகளாக செயல்படுவதால் தேர்தல் கூட்டணியை முடிவு செய்வது யார்? பேரத்தை எப்படி நடத்துவது, யார் நடத்தப் போகிறார்கள் என்ற கேள்வியும் பாமகவில் எழுந்துள்ளது.
* கட்சியின் அங்கீகாரத்தை இழந்து சரிவை நோக்கி செல்லும் பாமகவில் இருப்பதை தக்கவைக்க இருவரும் ஒருங்கிணைய வேண்டுமென்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
* பாமக இரண்டாக பிரிந்தால் வாக்குகள் சிதறும். எனவே, ராமதாஸை சமாதானம் செய்து கூட்டணியில் தொடர வையுங்கள் என்று அமித்ஷா, எடப்பாடிக்கு அசைன்மென்ட் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

* பின்வாங்க காரணம் என்ன?
புத்தாண்டு பொதுக்குழு மேடையில் பேசிய ராமதாஸ் கட்சியில் நான் எடுக்கும் முடிவுதான். அதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விலகிக் கொள்ளுங்கள், அது யாராக இருந்தாலும் சரிதான் என்று அன்புமணியை எச்சரித்தார். மேலும் அன்புமணியியை கட்சியிலிருந்து நீக்கப்போவதாகவும், வெள்ளைத்தாளில் முக்கிய நிர்வாகிகளிடம் இருந்து ராமதாஸ் கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்பட்டது. தோட்டத்திலிருந்த மாநில முக்கிய நிர்வாகியும் அது உண்மைதான் என்று கூறிவந்த நிலையில் நேற்று முன்தினம் அப்படியொரு காரியத்தை நான் செய்ய மாட்டேன் என்று ராமதாஸ் திடீரென பல்டி அடித்துள்ளார்.

ராமதாஸ் பின்வாங்கியதற்கான காரணம் குறித்து தோட்டத்து வட்டாரம் கூறுகையில், ‘கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர், செயலாளர்கள் அனைவரும் அன்புமணி பக்கம்தான் இருக்கிறார்கள். எனவே எந்தவொரு முடிவையும் அன்புமணி எடுக்க முடியும். ராமதாசால் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது. தன்னுடைய செல்வாக்கு குறைந்து விட்டதால் தன்னை ஓரங்கட்டி விடுவார்களோ என்ற பயம்தான் ராமதாஸ் இறங்கி வந்துள்ளதற்கும், தனது பேச்சில் பின்வாங்கியதற்கும் காரணம்’ என்றனர்.

The post பாமகவில் மோதிக்கொள்ளும் இரு அணிகள்: பாஜ பக்கம் சாயும் அன்புமணி எதிர்க்கும் ராமதாஸ்; சமரசம் செய்யும் டெல்லி, அதிமுக தலைமை பரபரப்பு பின்னணி appeared first on Dinakaran.

Related Stories: