ஊத்தங்கரை: பிரதமர் மோடி நிகழ்ச்சியை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏ வெளியேறியதால் பரபரப்பு எற்பட்டது. அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி ரயில் நிலையமும் அடங்கும். புதுப்பிக்கப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணகிரி கோபிநாத் எம்.பி., அதிமுகவைச் சேர்ந்த ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம், பாஜவைச் சேர்ந்த முன்னாள் எம்பி நரசிம்மன், மாநில பாஜ நிர்வாகி நரேந்திரன், முன்னாள் திமுக எம்எல்ஏ நரசிம்மன், ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், ரஜினிசெல்வம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கோபிநாத் எம்.பி., மேடைக்கு வரும்போது காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து கோஷமிட்டனர். பதிலுக்கு பாஜ சார்பில் முழக்கங்கள் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தமிழ்செல்வம் எம்எல்ஏ எழுந்து தனது கட்சி நிர்வாகிகளுக்கு உரிய இருக்கைகள் ஏற்பாடு செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்து, விழாவில் இருந்து பாதியில் வெளியேறினார். உடனடியாக ரயில்வே அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
The post மோடி நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறிய அதிமுக எம்எல்ஏ appeared first on Dinakaran.