அப்போது மருத்துவர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: அரியானாவை சேர்ந்த 5 வயது குழந்தைக்கு யூரியா சுழற்சி குறைபாடு என அழைக்கப்படும் ஒரு அரிதான மரபியல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பால் உணவிலிருந்து புரதங்களை முறையாக செரிமான செயல்முறையை கல்லீரலால் செய்ய இயலாது. இதன் காரணமாக ரத்தத்தில் அதிக அமோனியா சேரக்கூடும், அது மூளையை கடுமையாக பாதிக்கும். இதற்கு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது.
இந்நிலையில், தாயிடம் கல்லீரல் பெற்று ரோபோடிக் மூலம் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை, முற்றிலும் ரோபோடிக் செயல்தளத்தை பயன்படுத்தி செய்யப்பட்டிருப்பது உலகில் இதுவே முதன் முறையாகும். ரோபோடிக் கருவிகளையும், உபகரணங்களையும் உடலுக்குள் கொண்டு செல்வதற்கு அதிக சவால்கள் குழந்தைகளுக்கான சிகிச்சையில் இருக்கும். ஏனெனில், பெரியவர்களை விட மிகவும் குறைவான இடவசதியே குழந்தைகளுக்கான உடல்களில் இருக்கும். சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்தனர். அதுமட்டுமின்றி, தானம் அளிப்பவரிடமிருந்து கல்லீரலின் ஒரு பகுதியை சேகரிப்பதற்கான செயல்முறையும் ரோபோடிக் உதவியைப் பயன்படுத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லீரல் உறுப்புமாற்று பிரிவில் நிகழ்ந்திருக்கும் இந்த முன்னேற்றம், குறைவான வலியோடு விரைவாக மீண்டு குணமடையும் வாய்ப்பை வழங்குகிறது. அதுமட்டுமன்றி, இத்தகைய குழந்தைகளின் வயிற்றில் பெரிய சிகிச்சை தழும்பு இல்லாமல் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதால், அவர்களது வளரிளம் பருவ ஆண்டுகளின்போது, இயல்பான பிற குழந்தைகளைப் போல உளவியல் – சமூக வளர்ச்சியை இவர்கள் பெறுவதற்கும் இது உதவும். கல்லீரலை தானமாக வழங்கிய நபரும், குறைவான காலமே மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தது. செயல்முறை முடிந்ததிலிருந்து 5 நாட்களுக்குள் தானம் அளித்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதேபோல குழந்தை ஒரு வாரத்திற்குள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
The post உலகில் முதன்முறையாக ரோபோடிக் மூலம் 5 வயது குழந்தைக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: ரேலா மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.