உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: 333 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்

திருச்சி, மே 22: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்பட பல்வேறு முன்னோடி திட்டங்கள் கடைக்கோடியில் வாழக்கூடிய நபர்களுக்கும் சென்றடையும்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற நோக்கத்தின் பேரில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டதற்கு இணங்க இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் குறித்து உரிய தீர்வு காண்பர். அவ்வகையில் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், முத்தையம்பாளையம் கிராமம், அம்மாப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் உற்பத்தி செய்யும் இடத்தை நெரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், நாற்றாங்கால் உற்பத்தி தொடர்பான தகவல்களை அலுவலா்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அம்மாப்பட்டி நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் அளவுகள் குறித்தும், பொருட்களின் இருப்புக்குறித்த பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். அம்மாப்பட்டி நூலகத்தை நெரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உட்கட்டமைப்பு வசதிகள், அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, அங்குள்ள பணியாளாிடம் நூல்கள் மற்றும் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், நூலகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு துறைகளின் சார்பில் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.

இம்முகாமில், வருவாய் துறையின் சார்பில் சிறப்பு வரன் முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.19.49 லட்சம் மதிப்பில் 21 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், 271 பயனாளிகளுக்கு ரூ.16.26 லட்சம் மதிப்பில் நத்தம் பட்டாக்களும், 7 பயனாளிகளுக்கு ரூ.4.20 லட்சம் மதிப்பில் நத்தம் பட்டா நகலும், 4 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு கலைஞாின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.12.40 லட்சம் மதிப்பில் வீடுகட்டுவதற்கான ஆணையும், வேளாண்மைத்துறையின் சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.ஆயிரத்து 750 மதிப்பில் 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், கலைஞாின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ.4 ஆயிரத்து 150 மதிப்பில் 2 பயனாளிகளுக்கு பேட்டரி தெளிப்பான்களும்,

சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் ரூ.72 ஆயிரம் மதிப்பில் 6 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகையும், ஒரு பயனாளிக்கு ரூ.14 ஆயிரத்து 400 மதிப்பில் முதியோர் உதவித்தொகையும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 333 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், டிஆர்ஓ ராஜலட்சுமி, மகளிர் திட்ட அலுவலர் சுரேஷ் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: 333 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: