சென்னை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 1.75 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டின் மீன்பிடி தடைக்காலத்தில் தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.75 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக ரூ.8,000 வீதம் வழங்கிடும் பொருட்டு, அரசு ரூ.140.07 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியுள்ளது.
சென்னை, நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திருவள்ளுர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 கடலோர மாவட்டங்களை சேர்ந்த தலா 10 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைத்திடும் வகையிலான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் இரா.கஜலட்சுமி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 1.75 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.8,000: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.