சேலம், கோவை, கிருஷ்ணகிரியில் பரபரப்பு கலெக்டர் ஆபீசிஸ்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சேலம், கோவை கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்ட கலெக்டரின் முகவரிக்கு நேற்று காலை ஒரு மெயில் வந்தது. அதில், கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், 15.30 மணிக்கு அது வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து, மோப்ப நாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

மதியத்துக்கு மேல் பணியாளர்கள், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயிலில் நேற்று மாலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், ‘கலெக்டர் சார்… அபாயகரமான ஐஇடி வெடிகுண்டு நமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த குண்டு வெடித்தால் கடும் பாதிப்பு ஏற்படும். வைபை, சர்வர் உள்ளிட்ட டிஜிட்டல் சிஸ்டங்களை நிறுத்தி வையுங்கள். உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நீங்களும், உங்கள் அலுவலர்கள், பொதுமக்கள் சென்று விடுங்கள்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்தின் புதிய கட்டடம், பழைய கட்டடம், கலெக்டர் சேம்பர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 3 மணி நேரம் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அதில், மாலை 2.30 மணி அளவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் பைரவி உதவியுடன் அலுவலகத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் சோதனை மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகம் பின்புறம், பூங்கா, வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் என 3 மணி நேரம் சோதனை நடந்தது. முடிவில் புரளி என தெரியவந்தது.

The post சேலம், கோவை, கிருஷ்ணகிரியில் பரபரப்பு கலெக்டர் ஆபீசிஸ்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: