ராகுல்காந்தி, கட்சி மீது அவதூறு அமித் மாளவியா, அர்னாப் மீது காங். சட்ட நடவடிக்கை: பல புகார்கள் பதிவு

புதுடெல்லி: ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மற்றும் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக காங்கிரஸ் சட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளது. பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, எப்போதும் காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர். சமீபத்திய பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து, இவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பல்வேறு கருத்துக்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதே போல, பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, காங்கிரஸ் கட்சியின் கிளை துருக்கியில் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் எதிராக டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார். கர்நாடகாவில் இளைஞர் காங்கிரசின் சட்டப்பிரிவு கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘இப்போது இந்த ஜோடி பாதுகாப்பு கேட்டு நீதிமன்றங்களுக்கு ஓடுவார்கள். இந்த இருவரின் தீய செயல்களால் தேசத்திற்கு ஏற்பட்ட பெரும் தீங்கை நீதிமன்றங்கள் ஆராயும் என நம்புகிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

The post ராகுல்காந்தி, கட்சி மீது அவதூறு அமித் மாளவியா, அர்னாப் மீது காங். சட்ட நடவடிக்கை: பல புகார்கள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: