பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 31 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்பிக்கள் 7 குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரரான திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்பி யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார். இந்த குழு இந்தோனேசியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் எம்பிக்கள் குழுவில் இருந்து யூசுப் பதான் விலகிவிட்டார். இதுகுறித்து மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ‘ஆபரேஷன் சிந்தூர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை, உலகளவில் எடுத்து சொல்வதற்காக செல்லும் ஒன்றிய அரசின் எம்பிக்களின் குழுவிற்கான பிரதிநிதிகளின் பெயர்களை அந்தந்த கட்சிகளின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.
எங்களது கட்சி வெளிநாடு செல்லும் குழுவில் இடம் பெற்றுள்ளது. நாங்கள் அந்த குழுவை புறக்கணிக்கவில்லை. ஆனால் ஒன்றிய அரசின் ஒருதலைப்பட்ச முடிவுகளை ஏற்க மாட்டோம். பிரதிநிதிகளின் பெயரை ஒன்றிய அரசு முடிவு செய்ய முடியாது. அந்தந்த கட்சிகள் தான், தங்களது கட்சியின் பிரதிநிதிகளை பரிந்துரை செய்யும். இதுதான் வழக்கம்; இதுதான் நடைமுறையும் கூட. வெளியுறவுக் கொள்கையில் நாங்கள் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஒன்றிய அரசு எங்களை அணுகியிருந்தால், எங்களது கட்சியின் பிரதிநிதியை அனுப்பியிருக்கும்.
ஆனால் எந்த கோரிக்கையும் வரவில்லை’ என்றார். மம்தாவின் கருத்தின் அடிப்படையில் யூசுப் பதான் வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து விலகினார். இதுகுறித்து திரிணாமுல் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ‘தீவிரவாதத்தை ஒழிக்கவும், தேசிய இறையாண்மையை பாதுகாக்கவும் ஒன்றிய அரசின் முடிவுகளுக்கு எங்களது கட்சி தோளோடு தோள் நின்று ஆதரிக்கும். ஆனால், பல கட்சியின் குழுவிற்கான எம்பிக்கள் பிரதிநிதிகளை அந்தந்த கட்சிகள் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்விசயத்தில் ஒன்றிய அரசு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்ய முடியாது’ என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கூறுகையில், ‘மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் முடிவால் திரிணாமுல் எம்பி யூசுப் பதான் எம்பிக்கள் குழுவில் இருந்து விலகி உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது. எம்பிக்கள் குழுக்களின் வெளிநாட்டு பயணம் நாட்டின் நலன் சார்ந்தது, அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ என்றார்.
The post வெளிநாடு செல்லும் எம்பிக்கள் குழுவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியது ஏன்?: மேற்குவங்க முதல்வர் மம்தா விளக்கம் appeared first on Dinakaran.