நன்றி குங்குமம் தோழி
*கார பலகாரங்களை கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்க, பலகாரத்தின் ருசி கூடுவதுடன், நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
*வினிகர் சேர்த்து முட்டையை வேகவைக்க, முட்டை உடையாமல் பதமாக வெந்திருக்கும்.
*இனிப்புகளுக்கு ஏலக்காயுடன் சிறிது பச்சைக் கற்பூரம், ஒரு கிராம்பு, சிறிது ஜாதிக்காய் சேர்த்து பொடித்து வைத்து போட வாசனையாக இருப்பதுடன் சுவையும் கூடும்.
*பூரி மாவோடு உருளைக்கிழங்கு சேர்த்து பிசைந்து செய்ய பூரி சுவையாக இருக்கும்.
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
*வேர்க்கடலை உருண்டை செய்யும்போது வெல்லப்பாகுடன் சிறிது சர்க்கரையையும் சேர்த்து செய்தால் கரகரப்புடன் இருக்கும்.
*கத்தரிக்காய், வாழைக்காய்களை நறுக்கி சிறிது உப்பு கலந்த மோர் தண்ணீரில் போட்டால் அவை கறுக்காமல் இருக்கும்.
– டி.லதா, நீலகிரி.
*முறுக்கிற்கு மாவு பிசையும் போது நன்றாக கனிந்த ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து பிசைந்து முறுக்கு செய்தால் தனிச்சுவையுடன் முறுக்கு இருக்கும்.
*ரோஜா மலர் இதழ்களை உலர்த்தி டீ தூளுடன் கலந்து டீ போட சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
*வற்றல், வடகம் கூழ் காய்ச்சும் போது, சிறிதளவு பாலையும் சேர்த்து வடகம் போட்டால் வெண்மையாக இருக்கும்.
– கே.எல்.புனிதவதி, கோவை.
*மோர்குழம்பு தாளிக்கும் போது 3 லவங்கத்தை தாளித்துப் போட்டால் மோர் குழம்பு மிகவும் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
*காபி மேக்கரை கழுவும் போது நீருடன் கொஞ்சம் எலுமிச்சம் சாறுவிட்டு சுவிட்சை ஆன் செய்தால் போதும் சுத்தமாகி விடும்.
*வீட்டில் பயன்படுத்தும் நல்லெண்ணெய் பாட்டிலில் கொஞ்சம் வெல்லம் உருண்டையை போட்டால் சிக்கு வாடையே வராது.
– க.நாகமுத்து, திண்டுக்கல்.
*கேரட், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் கூட்டு மீந்து போனால் மறுநாள் கத்தரிக்காயை சட்டியில் போட்டு நன்றாக மசித்து கடுகு தாளித்து, சின்ன வெங்காயம் வதக்கி, சாம்பார் பொடி கலந்து கொதிக்க வைத்தால் இட்லி சாம்பார் ரெடி.
*ஜவ்வரிசி பாயசம் மீந்து போனால் 5 துண்டு பிரட்டை தேங்காய்ப்பால் விட்டு அரைத்து மில்க்மைடு, சர்க்கரை கலந்து கடைசியில் ரோஸ், பாதாம் பவுடர் ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி கலந்தால், பிரெட்- பாதாம் பால் ரெடி.
*பச்சை மிளகாய் இரண்டாக அரிந்து, புளி, குழம்பு தூள், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் வதக்கி, குழம்பு கரைசலை ஊற்றி கொதிக்க வைத்தால் மிளகாய் குழம்பு
ரெடி. இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.
*வெள்ளை பூசணியை துண்டுகளாக வெட்டி, வெள்ளரிக்காயை சேர்த்து தேங்காய், கசகசா அரைத்துவிட்டால் கூட்டு தயார்.
– டி.கே.வேலு, புதுச்சேரி.
*தட்டில் தூவிய மிளகாய் தூளுடன் நல்லெண்ணெயோடு சிறிது தண்ணீரையும் சேர்த்து அந்தக் கலவையில் சூடான இட்லியை பிரட்டி எடுத்தால் பொடி இட்லி பிரமாதமாக இருக்கும்.
*போண்டாவை சூடாக பொரித்து பரிமாற தொடங்கும் போது மோர்க்குழம்பில் சேர்த்து பரிமாறினால் ‘போண்டா மோர்க்குழம்பு’ ஜோராக இருக்கும்.
*பொரித்த கறிவேப்பிலையை மிளகுப்பொடி சாதத்தில் சேர்த்தால் சுவை கூடும்.
*தக்காளி சட்னியில் மெல்லிய காரத்துக்கு ஒரு குடைமிளகாயை சேர்த்து அரைக்கலாம். சுவை கூடும்.
– என்.பர்வதவர்த்தினி, சென்னை.
ஐஸ்க்ரீம் டிப்ஸ்…
*ஐஸ்க்ரீம் சாப்பிட்டவுடன் வெந்நீர் குடித்துவிட்டால் சளி பிடிக்காது. தொண்டை கட்டாது.
*ஐஸ்க்ரீம் செய்வதற்கான பாலை தேவைக்கு அதிகமாக காய்ச்சினால் ஐஸ்க்ரீம் சுவை குறையும்.
*கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்யலாம். செலவும் குறையும். சுத்தமாகவும் இருக்கும். நுங்குகளை தோல் நீக்கி, தேவைக்கேற்ப பால், சர்க்கரை, எஸன்ஸ் கலந்து, மிக்ஸியில் அரைத்து, ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான, சத்தான நுங்கு ஐஸ்க்ரீம் ரெடி.
*மில்க் பிரெட் அல்லது ரஸ்கைப் பொடித்து, சுண்ட காய்ச்சிய பாலில் கலந்து, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஃபிரீசரில் வைத்து எடுத்தால் சுலபமாக ஐஸ்க்ரீம் கிடைக்கும். மாம்பழம், ஆப்பிள் போன்ற பழங்களைக் கொண்டும் சுவையான ஐஸ்க்ரீம் செய்யலாம்.
– ஆர்.பத்மப்ரியா, திருச்சி.
The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.