ரோம்: இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் திரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இத்தாலியின் ரோம் நகரில், இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் காலிறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலாரசின் அரீனா சபலென்காவை வீழ்த்திய சீன வீராங்கனை ஸெங் க்வின்வென் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அதேபோல், ரஷ்யாவை சேர்ந்த இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி, அமெரிக்காவின் கோகோ காஃப் அரை இறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் கோகோ காஃப், க்வின்வென் மோதினர். க்வின்வென் கடுமையாக போராடியதால், முதல் செட்டை நீண்ட இழுபறிக்கு பின், காஃப் கைப்பற்றினார். 2வது செட்டை க்வின்வென் எளிதில் வசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து 3வது செட்டில், க்வின்வென்னின் சவாலான ஆட்டத்தை எதிர்கொண்டு அதை, காஃப் கைப்பற்றினார். அதனால், 7-6 (7-3), 4-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்ற காஃப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி, கோகோ காஃப் மோதுவர்.
அல்காரஸ் இறுதிக்கு தகுதி
ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேற்று, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியை சேர்ந்த, உலகின் 8ம் நிலை வீரர் லொரென்ஸோ முஸெட்டி மோதினர். இப்போட்டியில் அபாரமாக ஆடிய அல்காரஸ், 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
The post இத்தாலி ஓபன் டென்னிஸ்; திக்… திக்… திரில்லரில் தில்லாக வென்ற காஃப்: இறுதி போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.