தேஜ கூட்டணியில்தான் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளனர்: நயினார் உறுதி

அவனியாபுரம்: தேஜ கூட்டணியில்தான் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளனர் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மதுரை அனுப்பானடி பகுதியில் பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ கூட்டணியில் சேர விருப்பமில்லை என தவெக தலைவர் விஜய் கூறுவது அவருடைய சொந்த விருப்பம். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி அந்தந்த கட்சி தலைவர்கள் முடிவு எடுக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. பொறுமையாக இருங்கள். தேர்தல் கூட்டணி குறித்து உங்களுக்கு சொல்கிறேன்.

அமித்ஷா வேறு விஷயமாக தமிழகம் வந்தார். அதனால் அன்றைக்கு ஓபிஎஸ்சை சந்திக்க முடியவில்லை. ஆனால் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து ஏதும் பேச வேண்டாம். தற்போதுள்ள நிலையில் பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ளார். ஆகையால் அதை மட்டுமே பேச முடியும். பாஜ, அதிமுக கூட்டணியில் சேர்வது குறித்து, திருமாவளவன் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. சட்டப்பிரிவு 200ஐ ஆளுநர் தான் பயன்படுத்த முடியும். 201 சட்டப்பிரிவை குடியரசு தலைவர்தான் பயன்படுத்த முடியும். இதில் நீதிமன்றத்திற்கு எந்த நீதி வழங்க வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. நீதிமன்றங்கள் குறித்து நாம் விவாதங்கள் செய்யக்கூடாது. நீதிமன்றமே சட்டம் போடும் சூழ்நிலை ஏற்பட்டால், நாளைக்கு அரசியலமைப்பு சட்டங்களை எவ்வாறு இயற்ற முடியும்? தேர்தலில் வென்றால் ஆட்சியில் பாஜ இடம் பெறுமா என்பதை பொறுத்தவரை, பாஜ தற்போது வளர்ந்துள்ளது. முதலில் வெற்றி பெறுவோம். அதன் பின்பு பார்ப்போம். மதுரை நக்கீரருக்கு நீதி கிடைத்த மண். இங்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும். இவ்வாறு கூறினார்.

The post தேஜ கூட்டணியில்தான் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளனர்: நயினார் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: