கோவை, மே 16: கோவை இடையர்பாளையம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் திருப்பதி (32). பிளம்பர். இவருக்கு திருமணமாகி 2 மகள் மற்றும் 6 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் திருப்பதிக்கு மது பழக்கம் உள்ளது. ஆன்லைன் விளையாட்டில் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இதனால் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாமல் அவரது மனைவி அவதி அடைந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி ஆன்லைனில் விளையாடி கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு அவரது மனைவி கோபித்து கொண்டு குழந்தைகளை அழைத்து கரூரில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றார். அதன் பின்னரும் திருப்பதி விளையாட்டை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. ஆன்லைன் விளையாட்டை விட்டு வெளியே வர முடியாத திருப்பதி, பண பிரச்னையால் அவதி அடைந்தார். கடந்த 14ம் வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆன்லைன் விளையாட்டால் பண பிரச்னை: வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.