முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி மீது 2011ல் அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது 2020ல் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அமலாக்கத்துறை வழக்கையும் ரத்து செய்ய ஐகோர்ட்டில் ஜாபர் சேட் மனு தாக்கல் செய்தார்.

ஜாபர் சேட் மனுவை ஏற்று அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்த ஐகோர்ட், பின்னர் மறுவிசாரணை நடத்துவதாக அறிவித்தது. சென்னை உயர்நீதிமன்ற முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜாபர் சேட் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவதாகக கூறிவிட்டு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து நடத்தியதை ஏற்க முடியாது.

இதுகுறித்து நாங்கள் முன்னதாகவே கேள்வியெழுப்பி இருந்தோம். எனவே ஜாபர் சேட் விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. இருப்பினும் இதில் ஏதேனும் விளக்கம் தேவையென்றால் அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தை அணுகி கோரிக்கை வைக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற பதிவாளர் வழங்கிய அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தான் இந்த ஆணை பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்ததரவால் ஜாபர் சேட் மீதான பணமோசடி வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

The post முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: