சென்னையில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்க பரிந்துரை

சென்னை: சென்னையில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.2.000 அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளனர். வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பாக வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பாக தொழிலாளர் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து நடத்திய வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் துறை ஆணையாளர் சி.அ.ராமன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.05.2025) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

தமிழில் பெயர்ப்பலகைகள் அமையப் பெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உறுப்பினர் செயலராக தொழிலாளர் உதவி ஆணையாளர்கள் (அமலாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், பேரூராட்சி உதவி இயக்குநர், ஊராட்சி உதவி இயக்குநர், மாவட்ட அளவிலான வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான உணவு நிறுவன உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான வேலையளிப்போர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழுவின் மூலம், தமிழில் பெயர்ப்பலகை வைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகளை வகுத்தல், தொடர்புடைய துறைகள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பைப் பெறுதல், தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பான சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல், மாவட்ட ஆட்சியர்கள் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களை நடத்துதல், தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளுடன் இணைந்து துண்டுபிரசுரங்களை வழங்குவதன் மூலம் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பதன் அவசியம் குறித்து வேலையளிப்போர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், வேலையளிப்போர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கூட்டங்கள் நடத்தி தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகள், 1948 இன் விதி 18(அபராதம்)இன் கீழ் ரூ.2000/- அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், கேட்டரிங் நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கப்படாவிட்டால், தமிழ்நாடு கேட்டரிங் நிறுவனங்கள் சட்டம், 1958 இன் பிரிவு 23 (அபராதங்கள்) இன் கீழ் ரூ.500/- வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ம.பிரதிவிராஜ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கார்த்திகேயன், மாநகர வருவாய் அலுவலர் கே.பி.பானுசந்தர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.ஹஸ்ரத்பேகம், தொழிலாளர் துறை இணை ஆணையாளர்கள் தே.விமலநாதன், எல்.ரமேஷ், அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: