சென்னை: நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 7ல் தொடங்கி மார்ச் 7ம் தேதியுடன் முடிவடைந்தது. சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்வர்கள் புகார்கள் தெரிவிக்க பிரத்யேக இணையதளங்களை என்டிஏ உருவாக்கியுள்ளது.
அதன்படி https://nta.ac.in/, https://neet.nta.ac.in ஆகிய வலைத்தளங்களில் தேர்வர்கள் நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த புகார்களை மே 4ம் தேதி மாலை 5 மணி வரை தெரிவிக்கலாம். அதாவது, நீட் வினாத்தாள் இருப்பதாக அங்கீகரிக்கப்படாத இணைய தளங்கள், சமூக வலைத்தளங்களில் வந்தாலோ, என்டிஏ மற்றும் அரசு அதிகாரிகள் போல தொடர்பு கொண்டாலோ இந்த தளத்தில் புகார் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர் தவறு செய்தது உறுதியானால் அவர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, முறைகேடுகளில் ஈடுபடும், தவறான வழிகாட்டுதலால் தேர்வர்களை ஏமாற்ற முயற்சிக்கும் நபர்களிடம் இருந்து தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post நீட் தேர்வு மோசடி புகார்களை தெரிவிக்க பிரத்யேக இணையதளம்: என்டிஏ அறிவிப்பு appeared first on Dinakaran.