போக்குவரத்து விதிகள் குறித்த தொடர் விழிப்புணர்வால் சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு 14 சதவீதமாக குறைந்தது: போலீஸ் கமிஷனர் அருண் தகவல்

சென்னை: போக்குவரத்து விதிகள் குறித்த தொடர் விழிப்புணர்வு காரணமாக சென்னையில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு சாலை விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சென்னை முழுவதும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்கப் பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சாலை விதிகள், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றவும், சாலை பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்துவதன் மூலம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினருக்கு, நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து, விபத்துக்களை குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து முறையாக பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு இல்லாமல் சென்னை பெருநகர முழுவதும் சோதனைகள் மற்றும் ஏஎன்பிஆர் கேமராக்கள், 2டி வேக ரேடார் அமைப்பு மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் போன்ற தொழில்நுங்பங்கள் உதவியுடன் வேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை பதிவு செய்து போக்குவரத்து அமலாக்க உத்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலை நிலவரங்கள், அறிவிப்பு பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் போன்றவற்றை மேம்படுத்தியதன் மூலம் விபத்து ஏற்படக்கூடிய இடங்களை எளிதில் அடையாளம் கண்டறிய உதவுகிறது. இந்த கூட்டு முயற்சிகள் மூலம் சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளன. அந்த வகையில், கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ம் ஆண்டில் 25.4.2025ம் தேதி நிலவரப்படி இறப்பு 14 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 25.4.2024 வரை 173 உயிரிழப்புகள் நடந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 149 உயிரிழப்புகள் மட்டுமே நடந்துள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post போக்குவரத்து விதிகள் குறித்த தொடர் விழிப்புணர்வால் சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு 14 சதவீதமாக குறைந்தது: போலீஸ் கமிஷனர் அருண் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: