வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 8ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

திருச்சி: வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 8ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாஜ அரசு நிறைவேற்றியுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக அறங்கேற்றியுள்ளனர். இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை.

வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களிலும் தலையிடாத ஒன்றிய அரசு வக்பு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது. வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத நபர்களை நியமிப்பதற்காக சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். இதற்கு வெளிப்படை தன்மை எனக் கூறுகின்றனர். அரசியல் காரணங்களுக்காக கூட்டணி கட்சிகளும் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பீகாரில் 2 எம்பிக்கள் பதவி விலகியுள்ளனர். இது கூட்டணி கட்சிகளுக்கு பெரிய சவுக்கடியாகும். ஒன்றிய அரசின் மத விரோத போக்கை கண்டிக்கிறோம்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விசிக சார்பில் வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நீட் மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது. இந்த சூழலில் வரும் 9ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டியுள்ளார். அவரது முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம். நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தாமல் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 8ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: