சென்னையின் ஏப்ரல் மாத மின்தேவைக்காக 3,910 மெகாவாட் வாங்க ஒப்பந்தம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையின் ஏப்ரல் மாத மின் தேவைக்காக தினமும் 3,910 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஏப்ரல் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை மின்வாரியம் செய்துள்ளது. இதன் மூலம் தினமும் 3,910 மெகாவாட் மின்சாரம் பெறப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின் விநியோகத்தை சீராக வைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2,610 மெகாவாட் மின்சாரம் தினமும் 12 மணி நேரமும், கூடுதலாக 1,300 மெகாவாட் மின்சாரம் 6 மணி நேரமும் கிடைக்கும். வாங்கப்படும் மின்சாரத்தில், 1,300 மெகாவாட் நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தப்படும். இது இரவு நேரங்களில் அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்யும். மீதமுள்ள 2,610 மெகாவாட் மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை தேவைப்படும் மின்சாரத்திற்காக பயன்படுத்தப்படும்.

ஏப்ரல் 10ம் தேதிக்குப் பிறகு மின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மழை குறையும் மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் முந்தைய இரண்டு ஆண்டுகளின் மழை அளவை வைத்து, மே 10 வரை மட்டுமே மின் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் கிடைக்கிறது. சூரிய ஒளி இல்லாத நேரங்களில் தான் மின்சார தேவையை பூர்த்தி செய்வது சவாலாக இருக்கும். அதனால் அந்த நேரங்களுக்காக ஒப்பந்தம் செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னையின் ஏப்ரல் மாத மின்தேவைக்காக 3,910 மெகாவாட் வாங்க ஒப்பந்தம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: