பெரம்பூர்: தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து ஆசிரியை குதித்து தற்கொலை செய்திருப்பது ஓட்டேரி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (48). இவரின் மனைவி தேவிகா (37). இவர் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு தக்சன்யா (19), தர்ஷிகா (12) என்ற மகள்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தம்பதியினர் சரிவர பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதுசம்பந்தமாக நேற்று மாலை பிரச்னை ஏற்பட்டதால் வீட்டில் இருந்து தினேஷ் வெளியே சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதன்பிறகு கணவரின் செல்போனுக்கு தொடர்புகொண்ட ஆசிரியை, ‘’இனி நான் உங்களுடன் வாழ விரும்பவில்லை. தற்கொலை செய்துகொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த தினேஷ், மனைவியின் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது போனை எடுக்கவில்லை. இதனால் மேலும் பதற்றம் அடைந்த தினேஷ் உடனடியாக வீட்டுக்கு வந்துள்ளார். இதனிடையே நேற்றிரவு 8 மணி அளவில், தனது வீட்டின் அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து ஆசிரியை திடீரெனஅங்கிருந்து 9வது மாடியில் இருந்து தேவிகா குதித்துவிட்டார். இதில் தலையில் படுகாயத்துடன் கிடந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தபோது பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி உடலை பார்த்து தினேசும் மகள்களும் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜா, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்துக்கு வந்து தேவிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். குடும்ப பிரச்னையில் 9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post குடும்ப பிரச்னையில் விபரீத முடிவு? 9வது மாடியில் இருந்து குதித்து பள்ளி ஆசிரியை தற்கொலை: ஓட்டேரியில் அதிர்ச்சி சம்பவம் appeared first on Dinakaran.