இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது: ஒரு விசைப்படகும் பறிமுதல்

ராமேஸ்வரம்: இந்திய – இலங்கை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை, ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 464 விசைப்படகுகள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. இரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 8 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர்.

அப்போது ஜெர்சிஸ் அந்தோணிசாமிக்கு சொந்தமான விசைப்படகையும், அதில் இருந்த பாக்கியராஜ் (38), சவேரியார் அடிமை (35), முத்து களஞ்சியம் (27), எபிரோன் (35), ரஞ்சித் (33), பாலா (38), யோவாஸ் நானன் (37), இன்னாசி (37), ஆர்னாட் ரிச்சே (36), கிறிஸ்து (45), அந்தோணி சிசோரியன் (43) ஆகிய மீனவர்கள் 11 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர் அனைவரையும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மேல் நடவடிக்கைக்காக மயிலிடி மீன்வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஏப். 9ம் தேதி வரை, 11 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பேச்சு… போச்சு: மீனவர்கள் கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இந்த பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணும் வகையில், இலங்கை வவுனியாவில் இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் துவங்கியது.

இதில் ராமேஸ்வரம் மீனவ சங்க பிரதிநிதிகள், இலங்கை வடக்கு பகுதி மீனவ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, பிரச்னையை தீர்க்க இந்திய, இலங்கை அரசுகள் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் சிறை பிடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இலங்கை செல்லும் பிரதமர் பிரச்னைக்கு தீர்வு காண்பாரா?
விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் கார்ல் மார்க்ஸ் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதற்கு தயங்கும் நிலை உருவாகியுள்ளது. தொடர் கைது, கடுமையான சிறை தண்டனை, பெருந்தொகை அபராதம் என தமிழக மீனவர்களை முடக்கும் சட்ட நடவடிக்கைகளால் பல மீனவத் தொழிலாளிகள் வேறு ஊர்களுக்கு செல்கின்றனர்.

இருநாட்டு மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் கடும் கண்டத்துக்குரியது. அடுத்த மாதம் இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடி மீனவர்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தும் வகையில், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள படகுகளையும் மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.

 

The post இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது: ஒரு விசைப்படகும் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: